Tuesday, September 10, 2013

கிளி ஜோதிடம் (கவிதை )


சஞ்ஜீவி பர்வதம்

சுமந்து வானில் பறக்கும்

அனுமன் படம் வந்தது..

திரைகடல் ஓடி 

திரவியம் தேட விரைவில்

ஆகாயத்தில்  பறப்பேனாம்...

சொன்னான் கிளி ஜோதிடன் ..

தலை சாய்த்து ஏக்கமாய் எனை 

பார்த்து கூண்டுக்குள் சென்றது கிளி ..

Wednesday, August 28, 2013

ஜாதி (கவிதை )


பன்றியின் உடலில் 

செய்த 'வால்வை '

கூட பழுது பட்ட இதயம்

ஏற்று கொள்ளும் போது 

பண்பட்ட இரு  மனங்கள் 

இணையும் வாழ்வை 

ஏற்றுகொள்ள உங்கள்

இதயம் ஏன் மறுக்கிறது ...?

காதல் போயின் ...(கவிதை )


இணையாத
தண்டவாளங்களுக்கு
இடையே
சிதறி கிடந்தது
இணைய முடியாமல் போன 
ஒரு காதல் ...

ராசி (கவிதை )


சனி உச்சத்தில் 

இருந்த

மேஷமும் 

ரிஷபமும் 

கசாப்பு கடைக்கு
 
சென்று

கொண்டிருந்தன ...

அருந்ததி (கவிதை )



கற்பொழுக்கம் கற்க 
கண்ணுக்கு 
தெரியாத அருந்ததியை
வானில் மணமகன் 
காட்ட 
அம்மி மிதித்த
மணப்பெண்ணுக்கு
எழுந்தது ஐயம்.. 
இதோ கண்முன் 
தெரியும் தாயும் 
தங்கையும் தெரியாமல்
போனதேன் ..?

Saturday, July 13, 2013

கூண்டுக்கிளி (கவிதை)

 
ஆடிட ஊஞ்சல் 

கொரித்திட தானியம் 

ருசித்திட கனிகள்
 
பருகிட நீர்
 
எல்லாம் இருந்தன 

கூண்டுக்குள் கிளிக்கு
 
பறந்திட வானம் தவிர ...

Tuesday, July 2, 2013

வானவில் (கவிதை)


கைதட்டல்களுக்கு 

காத்திராமல் 

வானில் அழகாய் 

ஒரு ஹைக்கூ 

எழுதி மறைந்தது 

வாவில் ...

பிரார்த்தனை (கவிதை )


மகனுக்கு கல்லூரி 

அட்மிஷன் வேண்டி  

காணிக்கை 

போட்டேன் உண்டியலில்..

பிரார்த்தனை

நிறைவேறியது...

கோயில் தர்மகர்த்தாவுக்கு ..!! 

காகித கப்பல் (கவிதை )




நதிக்கரையில்

தரை தட்டியிருந்தது

கரையேறாத ஒரு காதல்...

காதல் கடிதத்தில்

செய்த

காகித கப்பலில் ...

Saturday, June 29, 2013

நம்பிக்கை (கவிதை )



காற்றிலிருந்து விபூதி

வாயிலிருந்து சிவலிங்கம்

உடல் முழுதும் பரவிய புற்று

ஒரு நாளில் மாயமாய் மறைய

பக்கவாதம் கண்டு

சக்கர நாற்காலியில் இருந்தவர்

எழுந்து ஓடும்

அற்புதங்கள்

பள்ளி வாசலில் கரீம் பாய்

முகத்தில் ஊத ஓடிவிடும்

குழந்தையின் குளிர் ஜுரம்..

மந்திரத்தில் மாங்காய்

நம்புவோருக்கு....

இலையுதிர் காலம் ( கவிதை )













வசந்தத்தில் ஓர் நாள் ...

மடிகள் தலையணை

விரல்கள் கேசத்தில்

விளையாட மரகிளையில்

கிளிகள் கொஞ்சி பேசின

நம்மை போல் ..

பசு மரத்தில்

நாம் செதுக்கிய

நம் பெயர்கள்

இன்று வடுவாய்...

புரையோடிய என் இதயத்தின்

காயம் போல..

இப்போது இலையுதிர் காலம்

அந்த நினைவுகள்

நெஞ்சிலிருந்து உதிராமல் 

ஒற்றைமாய் நான் ..



Friday, June 28, 2013

இரயில் பயணங்களில் ..(கட்டுரை )

 
 
     ancestry.com என்று ஒரு இணைய தளம் .   குடும்ப பெயரை வைத்து
தங்கள் வம்சா வழி (family tree ) , மூதாதையரை பற்றி தெரிந்து கொள்ள ஏதுவான தளம் . ஒரு முறை நல்ல நகைச்சுவை உணர்வு கொண்ட ஒரு   நண்பரிடம் பேசிக்கொண்டிருக்கையில்..
  "நம்மில் பெரும்பாலானோருக்கு  தாத்தா பெயர் தெரிந்தாலே அதிகம் .  இந்தியாவிலும் இப்படி ஒரு data base இருந்தால் நன்றாக இருக்குமே.." என்று சொன்னேன் . அதற்கு அவர்,

 "நீங்க வேற ..பரதேசி படம் பார்த்த அப்புறம் நானே ஆடி போயிட்டேன் . நம்ப கொள்ளு தாத்தா கொத்தடிமைன்னு தெரிஞ்சா இருக்கிற கொஞ்ச நஞ்ச நிம்மதியும் போயிடும் .." என்றார்.

கிழக்கு இந்திய கம்பெனி என்று வணிகம் செய்ய வந்து நம்மில் புரையோடி கிடந்த பிரிவினையை சாதகமாக்கி நம்மை   அடிமைபடுத்தி   200 வருஷங்களுக்கு மேல் நம்மை ஆண்டு வளங்களை கொள்ளையடித்து ...புளித்து போன வரலாறு . ஆனால் அந்த வெள்ளைக்காரன் புண்ணியம் கட்டி கொண்ட விஷயங்களில் ஒன்று இந்தியன் ரயில்வேஸ் . இன்று உலகிலேயே பெரிய நெட்வொர்காக விளங்கும் இந்தியன் ரயில்வேக்கு அடித்தளம் போட்டவன் வெள்ளைகாரன்தான் .


அறிவியல் தொழில் நுட்ப வளர்ச்சியில் பல விஷயங்கள்  தொலைந்து போயின . சுழலும் கிராம ஃ போன் இசை தட்டு , எண்களை ஒவ்வொன்றாய் சுழற்றும் டிரிங் ..டிரிங் தொலைபேசி ,வால்வ் ரேடியோ, புகைப்பட சுருள் காமெரா ..

இவை தவிர தனிப்பட்ட முறையில் நான் நிறையவே " மிஸ்" செய்வது புகை வண்டி. மற்றவர்களுக்கு எப்படியோ தெரியாது எனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து வாலிப பருவம் வரை  என் வாழ்கை பயணித்தது இரயில் ரோட்டில்தான் .  ரயில்வே குவார்டர்ஸ் ரயில் ரோட்டின் மிக அருகே இருந்ததால் குழந்தையாய் இருந்த போது எங்கள் இடுப்பில் கயிறு கட்டி கட்டில் காலோடு கட்டி வைப்பார்களாம்.

நாணயங்களை தண்டவாளத்தின் மேல் வைத்து இரயில் ஏறி சப்பையாக்குவதை பார்ப்பத்தில் ஒரு ஆனந்தம். ஊடகங்களுக்கு ஒலியை கடத்தும் தன்மை உண்டு இதற்கு ஒரு உதாரணம் தொலைவில் வரும் ரயில் வண்டியின் ஓசையை தண்டவாளத்தில் உணர முடியும் என்று வாத்தியார் பாடம் நடத்த இதை பரிசோதித்து பார்க்க தண்டவாளத்தில் நான் தலையை வைக்க இதை பார்த்து அப்பாவின் சகா "உங்க புள்ளை தண்ட வாளத்தில தலை வெச்சிருக்கான் " என்று சொல்ல வீட்டில் என்னமோ ஏதோ என்று பதற தலை தப்பியது தம்புரான் புண்ணியமாக போனது.
இதை போல் சிறார்கள் நாங்கள் கை கோர்த்து தண்டவாளத்தின் மேல் நடந்த நாட்கள் பல ..

சிறுவயதில் எல்லோருக்கும் ஒவ்வொரு மாதிரி ஆசை.  டாக்டர் , பைலட் ..இப்படி ...ஆனால் எனக்கோ லோகோ மோடிவ் நீராவி எஞ்சின் டிரைவர் ஆக வேண்டுமென்பது . ஏனோ தெரியாது அப்போதெல்லாம் பெரும்பாலும் ஆங்கிலோ இந்தியர்கள்தான் புகைவண்டி மற்றும் டீசல் எஞ்சின் ஓட்டுனர்களாக இருப்பார்கள். ஒவ்வொரு முறையும் பாசெஞ்சர் வண்டி வரும் போதும் எஞ்சின் வந்து நிற்கும் இடத்துக்கு போய் நின்று கொள்
வோம்.

கம்பீரமாக நீராவியை கக்கிகொண்டு பெரு மூச்செறிந்து
ஓடி வந்து நின்று ஆசுவாசபடுத்தி கொள்வதை பார்க்கும் பொழுது அந்த பிரம்மாண்ட கருப்பு இயந்திரம் முரட்டு காட்டு யானையை நினைவு படுத்தும்.
ஓட்டுனர்கள் தலையில் கரித்தூள் படிவதை தடுக்க கர்ச்சீப் கட்டி பின்புறம் சவலில் நிலக்கரியை வாரி லாவகமாக கீழே இரையாமல்   லீவரை இழுத்து இரும்பு கதவை திறந்து கனன்று கொண்டிருக்கும் தீயில் வீசுவதிலிருந்து
அவர்களின் ஒவ்வொரு நடவடிக்கையையும் கவனித்து
அந்த எஞ்சினின் இயக்கம் ஒவ்வொன்றும் அத்துப்படி .

கடைசி பெட்டியில் வெள்ளை யூனிபார்ம் அணிந்த கார்ட் விசில் அடித்து பச்சை கொடியை காட்டியவுடன் டிரைவர் மேலிருக்கும் கம்பியை பிடித்து இழுக்க வால்விலிருந்து நீராவி விடுபட்டு ஹாரன் வழியே போய் ..அதுதான் நம்மில் பலர் என்றோ கேட்ட கூ .....கூ ........!!

இப்போது எல்லோரும் பேசிக்கொண்டிருக்கும் சுற்று சூழலை மாசு படுத்தாத நிலக்கரி, தண்ணீரை மட்டுமே பயன் படுத்தும் "கிளீன் எனர்ஜி "

  கப்பலில் இருக்கும் ஸ்டியரிங்  போல் ஒரு இரும்பு சக்கரத்தை
கடிகார திசையில் சுற்றி கடப்பாரை போன்ற ஒரு பெரிய லீவரை தூக்க மிக அழுத்தத்தில் இருக்கும் நீராவி பிரம்மாண்டமான பிஸ்டனை தள்ளி இரும்பு சக்கரத்துடன் இணைந்துள்ள  பெரிய நெம்பு கோல் சக்கரத்தை சுழற்றி வண்டியை முன் நகர்த்தும் . ஸ்டியரிங்கை
 கடிகார திசைக்கு எதிர் திசையில் சுழற்றினால் வண்டி பின் நோக்கி செல்லும் . இவ்வளவுதான் . மற்றபடி நீராவி அழுத்தங்களை பலவித மாணிகளில் அவ்வபோது  கண்காணிப்பர்  . எப்போதும் பைலட் கோ -பைலட் போன்று இருவர். ஒருவர் கரியள்ளி கொட்ட மற்றவர் மெயின் டிரைவர் . இவர் தான் எங்கள் ஹீரோ . ரயில்வே குவாரடர்ஸில் இருக்கும்
என் சக வயது பையன்கள் என்ஜினருகே போய் டிரைவரிடம் மூச்சா போகும் ஒருவிரல் சைகை காண்பித்தால் அதை அவர் புரிந்து கொண்டு எஞ்சினுக்கு போடும் கிரீஸை கொடுப்பார் . அது இப்போதைய சாசேஜ் போல் அழகாக பட்டர் பேப்பரில் சுற்றியிருக்கும் . அதுதான் எங்கள் play dough . ஒழுகும் ஃ பௌண்டைன் பேனாவுக்கும் மறையில் தடவினால் ஒழுகாது .

எக்ஸ்பிரஸ் ரயில் எங்கள் ஊரில் நிற்காது . அப்போதெல்லாம் ரயில்வண்டி ஒவ்வொரு நிலையத்தையும் கடந்து விட்டது என்பதற்கு அத்தாட்சியாக குறுப்பிட்ட எண் பொறிக்கப்பட்ட இரும்பு குண்டு மூங்கில் பிரம்பால் செய்யப்பட்ட டென்னிஸ் ராகெட் போன்ற வளையத்தில்
விலங்கு தோலினால் ஆன பௌச்சினுள் வைக்கப்பட்டு டிரைவரிடம் கொடுக்க படும். இதனை அந்த டிரைவர் அடுத்த நிலையத்தில் கொடுக்க வேண்டும் . ஒவ்வொரு நிலையத்திலும் இந்த முறையை பின்பற்றினால்தான் வண்டி அடுத்த நிலையத்துக்கு செல்ல முடியும் .

அந்த நிலையத்தின் நிலைய அதிகாரி (ஸ்டேஷன் மாஸ்டர் )
அல்லது பாயிண்ட்ஸ் மேன் , பிளாட்பாரத்தில்  அதிவேகமாக வரும் ரயிலுக்கு வெகு அருகில் நின்று கொண்டு அந்த மூங்கில் வளையத்தை கொடுக்க வேண்டும் . எக்ஸ்பிரஸ் வண்டியின் டிரைவர் தான் கொண்டு வந்த வளையத்தை வீசி எறிந்து இந்த வளையத்திற்குள்  லாவகமாக கையை நுழைத்து பெற்று செல்வார் . இரவு நேரங்களில் டிரைவருக்கு தெரிவதற்காக மூங்கில் வளையத்தை கொடுப்பவர் மறு கையில் தீபந்தம் ஏந்தி நிற்பர்.
இதை ஏதோ சர்க்கஸ் பார்ப்பது போல் ஒவ்வொரு முறையும் புதிதாக பார்ப்பது போல் பார்த்து அதிசயித்ததுண்டு .

இரயில்வே தொழிலாளிகள் குடும்பம் எப்பொழுதும் கழைகூத்தாடிகள் போல் ட்ரான்ஸ் ஃ பர் -க்கு தயாராக இருக்க வேண்டும் . ஒருமுறை திருவண்ணாமலைக்கு பக்கத்தில் ஒரு ஊரில்  இருந்தோம் .
இரயில் வெகு தொலைவில் மலையடிவாரத்தில் புகையை கக்கி கொண்டு வளைந்து வரும் காட்சி கொள்ளை அழகு ,
தேர்ந்த ஓவியனின் கேன்வாஸ் ஓவியம்  போல.

ஜன்னலோரம் பயணம் செய்து பச்சை பசேல் வயல் வெளிகள் , வேகமாக ஓடும் மரங்கள் , படிக்கட்டில் நின்று வளைவில் நம்மை இழுத்து செல்லும் எஞ்சினை எட்டி பார்த்து ரசித்த நாட்கள் ..(கண்களில் கரியும் விழுந்ததுண்டு )

பின்னர் அகல ரயில் பாதை வந்த பிறகு மின்மயமாக்க பட்டு புகை வண்டிகள் கொஞ்சம் கொஞ்சமாக அதன் கரும்புகை போல் மறைந்து
போனது .

இப்போது அந்த அனுபவம் கிடைக்க வேண்டுமானால் குன்னூர்- உதகமண்டலம் இரயில் பயணம் மேற்கொண்டால் கிடைக்கும் . அற்புதமான அனுபவம். உயிரே படத்தின் "தக தைய தைய தையா .." பாடல் படமாக்கபட்டது இந்த வண்டியில்தான் .

எழில் கொஞ்சும் நீலகிரி மலை பெண்ணின் தேகத்தின் வளைவு நெளிவுகளில் ஊர்ந்து மேடு பள்ளங்களில் ஓடி இன்னும் கொஞ்ச நேரம் நீடிக்காதா என மனம் ஏங்கிடும் இருண்ட குகை பிரவேசம் ....ஒரு பரவச அனுபவம்.

UNESCO -வால் World Heritage Site ஆக அங்கீகரிக்கபட்டு
இன்னும் பராமரிக்கப்பட்டு வருவது பாராட்டுதலுக்கு உரிய விஷயம் .
 உயர்ந்த பாலத்தில் இரயில் வண்டி செல்கையில் கீழே படு பாதாளத்தை பார்க்கும் பொது ஏதோ வானத்தில் பறப்பதை போன்றதொரு உணர்வு . மீண்டும் பழைய இரயில் நாட்களை நினைவு படுத்திய பயணம் .
இதுவும் இன்னும் எத்தனை காலத்துக்கு இருக்கும் என்று சொல்ல முடியாது.

மறைந்து விட்ட "டைனசர்" இனம் போல நம் குழந்தைகள்
எதிர் காலத்தில் புகை வண்டியை படத்தை
பார்த்தோ இல்லை கிழக்கே போகும் இரயில் படத்தின் " பூவரசம்பூ பூத்தாச்சி பாடலை..." பார்த்தோதான் தெரிந்து கொள்ள வேண்டும் என்று நினைத்தால் வருத்தமாக இருக்கிறது .

இப்போது மிச்சமிருப்பது   புகை வண்டி விட்டு சென்ற கரும்புகை போல் வானில் நீண்டு மிதக்கும் கார் மேகம் நினைவு படுத்தும்   இரயில் கால நினைவுகள் மட்டுமே .....
.                                                                         

                                                                             ********

 

Sunday, June 23, 2013

ஆறாம் அறிவு (கவிதை )


ரகசியம் (கவிதை)

காதோடுதான் ஒரு
ரகசியம் சொன்னாய் ..
உன் இதழ்கள்
உரசிய ஸ்பரிசம்
பிடித்திருந்தது
ரகசியத்தை விட ...

Saturday, June 22, 2013

காசு ..பணம் ..துட்டு ..money ..money (சிந்தனை துளி )

இருப்பதை விட்டு பறப்பதற்கு ஆசை படக்கூடாது என்று ஒரு பழமொழி  உண்டு.  ஒரு கதை நினைவுக்கு வந்தது . அதுக்கு முன்னாடி ஒரு சின்ன சமாச்சாரம் . Youtube  ஆரம்பத்துல வர கமர்சியல் மாதிரி இந்த கதைக்கும் அதுக்கும்  எந்த சம்மந்தமும் இல்லை ..

இப்பல்லாம் ஆளாளுக்கு ஹாண்ட்ஸ்ஃப்ரீ, புளு டூத் -ன்னு பேசிக்கிட்டே  நடமாடுறதால  யாரு தனக்கு தானே பேசிக்கற அரை லூசு , யாரு Hi-Fi Wi-Fi ஆசாமின்னு அடையாளம் கண்டுக்க ரொம்பவே கஷ்டமா இருக்கு ...சரி  இப்ப கதை..

முன்னொரு காலத்துல ஒரு   ஊருக்கு ஒரு பெரிய ஞானி விஜயம் செய்தாராம். அந்த ஊர் மக்கள் பலரும் அந்த ஞானியை தரிசித்து அருளாசி பெற்றனர்.

இதை கேள்விப்பட்ட ஒரு ஏழை விவசாயி அவரை காண சென்றான் . ஒரே கூட்டம். வரிசையில் நின்று  அவன்  முறை வந்ததும் முகத்தில் சாந்தம் தவழும் அந்த ஞானி அந்த குடியானவனிடம் வினவினார்

"சொல் மகனே , உனக்கு என்ன குறை ..?"

அதற்கு அந்த விவசாயி " அய்யா நாட்டில் எல்லோரும் சகல சௌபாக்கியங்களோடு சந்தோஷமாக இருக்கிறார்கள் . நான் மட்டும் சந்தோஷமாக இல்லை .."

அதற்கு அந்த ஞானி " சரி ..உன்னிடம் இருக்கும் சொத்து என்ன ..? என்று கேட்க, அதற்கு அந்த விவசாயி

" ஐயா சொல்லும்படியாக ஒன்றும் இல்லை . ஒரு காணி நிலம் , கொஞ்சம் கோழிகள், கால்நடை ஒரு சிறு குடிசை அவ்வளவுதான் இதை வைத்து கொண்டு எப்படி சந்தோஷமாக இருக்க முடியும் ....?" என்றான் .

" உனக்கு வாழ்க்கையில் சந்தோசம் வேண்டும் அவ்வளவுதானே ..? உனக்கு ஒரு பரீட்சை வைக்க போகிறேன் . அது முடிந்ததும் நீ விரும்பிய சந்தோசம் உனக்கு கிட்டும் என்றார் .."

அதை கேட்ட குடியானவன் "சரி நான் தயார் என்றான் .."

"சரி இன்று இரவு தூங்கும் பொழுது கோழிகளை உன் குடிலுக்குள் கொண்டு வந்து அவைகளுடன்  தூங்கு ..நாளை எனை வந்து பார்.."  என, அதற்கு அந்த விவசாயி,

 " ஐயா , நான் இருப்பதோ சிறிய குடிசை இதில் எப்படி .." என்று தயங்க ,

"உனக்கு சந்தோஷம் வேண்டுமா , வேண்டாமா ?" என்று அந்த அறிஞர் கேட்க அரை மனதோடு விடை பெற்று சென்றான் விவசாயி .

மறுநாள் அந்த ஞானியை சந்தித்த விவசாயி "அய்யா கோழிகளின் சத்தத்தில் என்னால் நிம்மதியாக தூங்க முடியவில்லை என்றான் ..."

 அதற்கு அந்த ஞானி,  " நல்லது இன்று இரவு கோழிகளுடன் வெள்ளாடுகளையும் வீட்டினுள் கொண்டு வந்து உறங்கு .." நாளை மீண்டும் எனை வந்து பார் " என்றார் .

குடியானவன் அவர் சொன்னதை நிறைவேற்றி மறுநாள் மீண்டும் அந்த ஞானியை சந்தித்தான் . "நேற்று இரவு எப்படி தூங்கினாய் ..? என்று அவர் கேட்க ,

 "ஐயா முந்தைய இரவே தேவலாம் , கொழிகளோடு சேர்த்து ஆடுகள் சத்தம் கொடுமையாக இருந்தது .." என்றான் .

 " சரி இதுதான் பரிட்சையின் கடைசி நாள் ..இன்று இரவு கோழி, ஆடுகளுடன் மாடுகளையும் சேர்த்து கொள் ..மீண்டும் நாளை வா .." என்று சொல்ல , அந்த விவசாயிக்கு முதன் முறையாக நாம் சரியான   ஒரு பித்தனிடம் வந்து மாட்டிகொண்டோமோ என்று ஐயம் எழுந்தது 

எதற்கும் அது கடைசி முறை என்பதால் மறுப்பு எதுவும் தெரிவிக்காமல் வீட்டுக்கு கிளம்பினான். மறுநாள் ஞானியை சந்தித்த விவசாயின் முகம் தூக்கமில்லாமல் சோர்ந்திருந்தது

 " அய்யா என் மேல்  ஏன் இந்த கொல வெறி ..? நேற்று இரவுதான் நரகம் என்பது என்ன என்பதை முழுமையாக அனுபவித்தேன் .. கோழி, ஆடு , மாடுகள் இவைகளுக்கே இடம் போதவில்லை அவைகளின் சாணத்தின்  நாற்றத்தோடு கொசுக்கள் என்னை பிடுங்கி எடுத்து விட்டன . ஒரு நொடி கூட கண்ணயர முடியவில்லை .." என்று புலம்ப  , ஞானி.

 "  இதைதான் நான் எதிர்பார்த்தேன் .".என்றார் மர்மமாய் புன்னகைத்து . "

"மகனே இன்றோடு உன் கஷ்டங்களுக்கு எல்லாம் ஒரு முடிவு வரும் போ.. வீட்டுக்கு சென்று  வீட்டை நன்றாக கழுவி  சுத்த படுத்தி இன்று இரவு நீ மட்டும் தனியே படுத்துறங்கு . நாளை வந்து பார் .." என்று விடை கொடுத்து அனுப்பினார்
.
மறுநாள் ஞானியை காண வந்த  குடியானவன் முகத்தில் மட்டற்ற மகிழ்ச்சி ...

" அய்யா ஜன்னலில் வந்த நிலவொளியில் , வீசிய இதமான  தென்றலில் ,  நேற்று இரவு அருமையான உறக்கம் கண்டேன் இதுதான் சொர்க்கம் 
  . " என்றான் .

அதற்கு அந்த ஞானி  , "இதுதான் நீ விரும்பிய சந்தோஷம் .. போய் வா " என்றார் .

என்னதான் வெளியில் இருக்கும் லௌதீக விஷயங்களில் சந்தோஷம் இல்லை,  உண்மையான சந்தோஷம்  நம் மனதுக்குள்தான்
 இருக்கிறது என்று இந்த கதையின் நீதி சொன்னாலும் ஒவ்வொரு முறையும் புது மாடல் iphone , ipad வரும்போது temptation- ஐ கட்டுபடுத்துவது சிரமமாகவே இருக்கிறது.

 இப்பதான் புரியுது ஏன் iphone க்கு ஆப்பிள் லோகோவா 
 வச்சிருக்காங்கன்னு ..

ஏடன் தோட்டத்தில temptation ஆரம்பிச்சதே இந்த ஆப்பிள் -ல இருந்து
தான் என்பதாலோ .....?

Wednesday, June 19, 2013

விலை நிலம் (கவிதை)


வெட்டப்படும்

பசு மரங்கள்

நாளை

நம் சந்ததிக்கு

கொள்ளி கட்டைகள் ..

விளை நிலங்கள்

விலை நிலங்களாகி

தோண்டப்படும்
 
அஸ்திவாரங்கள்

நமக்கு நாமே தோண்டிய

சவ    குழிகள் ..

Sunday, June 16, 2013

கொன்றால் பாவம் (கவிதை)

உங்கள் நாவின்
ருசிக்காக தினம்
மரித்தோம்  என்றன
வெள்ளாடுகள்..
உடைக்காக மரித்தோம்  
என்றன பட்டு பூச்சிகள் ..
நீவிர் புசித்த தேகம் போக 
எஞ்சிய எங்கள் தோல்
உங்கள் காலணி
என்றன ஆவினம் ...
குண்டடி பட்டு மரிக்கும் முன்
மானினம் கேட்டன
உம் பாவங்களுக்கு
மரித்தவரை
மட்டும் கடவுள் என்றீர் ...

கணக்கு வாத்தியார் (கவிதை )


அதே ஒற்றையடி பாதை..
பழைய மிதி வண்டி..  
சிறிது நின்று இளைப்பாற
உயரே ஒரு ஆகாய விமானம்
அண்ணாந்து பார்த்தார் 
கணக்கு வாத்தியார்
தன்னிடம் பயின்ற குமார்
அதில் பயணிப்பதை அறியாமலே ...

Thursday, June 13, 2013

பசி (கவிதை )


தன்மானம்

பசியிடம் தோற்று

மழையில் நனைந்து

யாசித்து

கொண்டிருந்தது

விதியிடம்....


முத்தம் (கவிதை)





விழிகள்  துவக்கிய

காதல் காவியத்திற்கு

இதழ்கள் எழுதும் முகவுரை

காம சூத்திரத்தின்

முதல் அத்தியாயம்

அதரங்கள் உரசி

பற்ற வைக்கும்

இன்ப தீ

மன்மத குறளில்

உதடுகள் எழுதும் காமத்து பால்

உச்சரிக்காமல் இருவர் பேசும்

மோக மொழி ...

Tuesday, June 11, 2013

கவிதாஞ்சலி

கண்ணெதிரே தவழ்ந்து  குமரியாய் வளர்ந்து  ஒருநாள் காற்றோடு காற்றாய் கலந்து காணாமல் போன  ஒரு கஸ்தூரி மஞ்சளுக்கு சமர்ப்பணம் ..



ஊடலின் சோகம்
கூடலின் சுகம்..
சிசுவின் அழுகையில்
சுரந்திடும் முலை பாலில்
வழிந்தோடும் தாய்மை..
சிகையில்  முதல்
வெள்ளி கண்டு கலக்கம்..
பேர பிள்ளைகள்
மடியை ஈரமாகிய பூரிப்பு...
யாவுமறியாமல்
வாழ்கை நாடகம்
முடியும் முன்னரே
பாதியில் எழுந்து
நீ கிளம்பியதேனோ ..?
காலன் வரும்  வரை
காத்திருக்க பொறுமை இன்றி
உனக்கு நீயே
ஏன் எழுதிக்கொண்டாய் முடிவுரை ..?
வாழ்வை எதிர் கொள்ள முடியா
கோழையல்ல நீ
மரணத்தின் மூலைக்கு
தள்ளப்பட்ட நிராயுதபாணி ..
பாதி முடிந்த சித்திரமே
உன் முழு பிம்பம்
என் கண்களில் இன்றும்..
பரிபூரணமாய் நீ
என் இதயத்தில் என்றும்..

Monday, June 10, 2013

சல்யூட் (சிறுகதை)

அன்புடையீர்...இந்த சிறு கதையை நீங்கள்  படித்து  முடித்த உடன் இந்த உலகம் ஒரு உருண்டை, வாழ்கை ஒரு வட்டம் என்ற உண்மை      பொட்டில் அடித்தார் போல்  உங்களுக்கு  புரியும் ...


அன்புடையீர்...இந்த சிறு கதையை நீங்கள்  படித்து  முடித்த உடன் இந்த உலகம் ஒரு உருண்டை, வாழ்கை ஒரு வட்டம் என்ற உண்மை     பொட்டில் அடித்தார் போல்  உங்களுக்கு  புரியும் ...



என்னடா சொன்னதையே திருப்பி திருப்பி சொல்லுறாரே ஒருவேளை கிரிக்கெட் விளையாடி  பின்னந்தலையில் "மெடுல்லா ஒப்ளேங்கட்டா"-வில இவருக்கு அடிபட்டிருக்குமோன்னு தானே யோசிக்கிறீங்க ......?

அதெல்லாம் ஒண்ணுமில்லே ..ஒரு தடவைக்கு  ரெண்டு தடவை  சொன்னா தத்துவம் அடி மனசுல ஆழமா பதியும்னுதான் .  சரி வாங்க,  கதைக்கு போவோம்...



வேலூர் ..பிரபல தனியார் மருத்துவ மனை ...  .உள்ளூர் நோயாளிகள் போதாதென்று  இந்தியாவின் பல்வேறு மாநில நோயாளிகள் , உறவினர்கள் என்று ஏகப்பட்ட கூட்டம்

"இங்க  தன்ராஜ் ஃ பாமிலி யாரு  ...?" அட்டெண்டெர் பெரியசாமி வெளியே பெஞ்சில் வரிசையாக அமர்ந்திருந்த நோயாளிகளையும் உறவினர்களையும் பார்த்து கேட்க ,

"நான்தாங்க  பேஷண்டுக்கு  வைஃப் ." என்றார் ஒரு முப்பதைந்து வயது மதிக்கதக்க பெண்மணி கவலை தோய்ந்த முகத்தோடு .

"உள்ள போங்கம்மா ...டாக்டர் வர சொல்றார் ..."

டாக்டர் குமரகுரு "கன்சல்டண்ட் யூராலாஜி" என்று வெள்ளை  எழுத்துக்களில்  மேஜை மீது இருந்த செவ்வக மர பலகை சொல்லியது .

 சுமார் நாற்பத்தைந்து வயதில் குறுந்தாடியில், கஞ்சி போட்டு இஸ்தரி செய்து தும்பை பூ வெள்ளை கைத்தறி சட்டை அவர் எளிமையை காட்ட , அகன்ற நெற்றியும்   கண்களில் தெரிந்த தேஜஸும் பழுத்த அனுபவத்தை காட்டியது.

 சுழல் நாற்காலியில் அமர்ந்து    பெரிய கம்யூட்டர் மானிட்டரில்  நோயாளியின்  எக்ஸ் ரே , CT ஸ்கேன் படங்களை மூக்கு கண்ணாடியை நாசி நுனிக்கு கீழிறக்கி  கூர்ந்து பார்த்து கொண்டிருந்தார்.

"வாங்கம்மா நீங்கதான் Mr .தன்ராஜின் மனைவியா ..?"

"ஆமாம் டாக்டர் .."

"உட்காருங்க..   நீங்க வேலூரா ..?"

 ஒருவித பதட்டத்துடன் நாற்காலியை இழுத்து நுனியில் உட்கார்ந்த  தன்ராஜின் மனைவிக்கு திரை படங்களில் மருத்துவர்கள் ஒரு எக்ஸ்-ரே வை தலை கீழாக பிடித்து பார்த்து   உதட்டை பிதுக்கி , தலையை ஆட்டி  "இன்னும் மூணு மாசம்தான் .." என்று சொல்லும் காட்சிகளெல்லாம் கண் முன் தோன்றி மறைந்தன.

"இல்லை டாக்டர் அம்பத்தூர் . இங்க உறவு காரங்க கல்யாணதுக்கு வந்தோம் ..வந்த எடத்துல இப்படி ஆயிடிச்சி. ரிசப்ஷன் முடிஞ்சி ஃ ப்ரெண்ட்ஸ் கூட கொஞ்சம் வெளியே போயிட்டு வரேன்னு சொல்லிட்டு போனாரு. எனக்கு அப்பவே தெரியும் இந்த ஆளு இப்படி ஏதாவது பண்ணுவாருன்னு.  ஃ ப்ரெண்ட்ஸ் கூட சேர்ந்து குடிச்சிட்டு வண்டி ஓட்டி ..."  முந்தானையில் கண்களை கசக்கினாள் அந்த பெண்மணி.

"கவலை படாதீங்கம்மா. நல்லவேளை உயிருக்கு ஒண்ணும் ஆபத்தில்லை . ஆனா இடுப்பில இருக்கிற சில எலும்புங்க உடைஞ்சு சிறுநீர் வெளியேறும் வழி பாதிக்க பட்டிருக்கு. அதனால சிறுநீர் வெளியேற முடியாம சிறுநீர்ப்பை உப்பி அடிவயிறு வீங்கி இருக்கு. ஃபோலிஸ்  கதீட்டர் -ங்குற ரப்பர் குழாயை உள்ளே செலுத்தி சிறுநீரை வெளியேற்ற முயற்சி செய்தோம் ஆனா முடியலே.   சிறுநீர்  பையின்கொள்ளவை விட அதிகமானால் சிறுநீர்
சிறுநீரகத்துக்கு ஏறிஅதனால சிறுநீரகங்களுக்கு  பாதிப்பு ஏற்படலாம் .
அதோடு சிறுநீர்  கசிந்து உள்ளே இருக்கும் மற்ற உறுப்புகள் பாதிக்கப்படும் வாய்ப்பு இருக்கு .அதனால அவருக்கு  அடிவயிற்றில ஒரு குழாயை செலுத்தி சிறுநீரை வெளியேற்றி இருக்கோம்.  இதை "சுப்ரா பியுபிக் பஞ்ச்சர்"ன்னு சொல்லுவாங்க . இது தற்காலிகம்தான்.  அவருக்கு உடனடியா அறுவை சிகிச்சை செய்தாகணும். ..உங்க கணவர் இப்போ கையெழுத்து போட முடியாத நிலைமையில் இருப்பதாலே நீங்க அறுவை சிகிச்சைக்கு சம்மதம் தெரிவித்து இந்த  பேப்பர்ல கையெழுத்து போடணும் . "இன்ஃ பார்ம்டு கன்சென்ட்" அதாவது ,

டாக்கர்-ங்குற முறையில அறுவை சிகிச்சை பற்றியும் அதன்  பின் விளைவுகள் பற்றியும் நோயாளிக்கு விளக்க வேண்டியது என் கடமை . . விபத்தால அடி வயிற்றில இருக்கிற சில நரம்புகள் பாதிக்க பட்டிருக்கிறதால  துரதிருஷ்ட வசமா  பிற்காலத்தில் தாம்பத்திய உறவு பாதிக்க  நிறைய வாய்ப்பு இருக்கிறது. மருத்துவரின் கவன குறைவு தவிர்த்து அறுவை சிகிச்சை செய்ததின் விளைவாகத்தான் அப்படி நேர்ந்தது என்று சட்ட ரீதியாக மருத்துவ நிர்வாகத்தின் மீதோ மருத்துவர் மீதோ நஷ்ட ஈடு எடுக்க மாட்டோம் என்பதற்கான உங்கள் சம்மதம் கூட இதுல உள்ளடங்கி இருக்கு  ... .

உங்களுக்கு வேற ஏதாவது கேட்கணும்னு தோணிச்சின்னா கேளுங்க ..."

தன்ராஜின் மனைவி எதுவும் பேசும் நிலைமையில் இல்லை . கன்னிபருவத்திலே சிச்சுவேஷன் சாங்  "பட்டு வண்ண ரோசாவம் .." பாட்டு மட்டும் ஏனோ நினைவுக்கு வந்தது .

வாழ்க்கையில் எல்லா கெட்ட விஷயங்களும் ஒரே சமயத்தில்  கைகோர்த்து  வர , தன் விதியை நொந்து கொண்டு  அறுவை சிகிச்சைக்கு சம்மதம் தெரிவித்து பேப்பர்களில் கையெழுத்து போட்டு கொண்டிருக்கும் கேப்பில் ... ஒரு விஷயம் மட்டும் உங்களிடம் சொல்லி கதையை தொடர்கிறேன்.

அதாவது டாக்டர் குமர குருவும் அவசர சிகிச்சை பிரிவில் இருக்கும் நோயாளி தன்ராஜும் ஒரு கால கட்டத்தில்  பல வருடங்களுக்கு முன்பு சந்தித்து இருக்கிறார்கள் என்பதும் பொறியாளராக ஆக வேண்டிய டாக்டர் குமரகுரு மருத்துவராக காரணமே தன்ராஜ்தான் என்கிற விஷயம் நம்மை தவிர வேறு யாருக்கும் தெரியாது ..  சரி    மேல படிங்க ..


சென்னை ..25 வருடங்களுக்கு முன்பு ...



ப்ளஸ் டூவில் ஸ்டேட் ரேங்க் எடுத்து தேர்ச்சி பெற்ற குமர குருவுக்கு இப்படி ஒரு குழப்பம். மருத்துவமா இல்லை பொறியியலா ..? எதுவும் முடிவு செய்ய முடியாத நிலையில் பொறியியல் கல்லூரியில் சேர்க்கை முன்னதாக இருந்ததால்  பொறியியல் கல்லூரியில் விண்ணப்பித்து  மனதில் இருந்து மருத்துவத்தை நீக்கி தான் ஒரு பொறியாளன் என்கிற நினைப்புக்கு தன்னை மாற்றி கொண்டு பொறியியல் கல்லூரி வாழ்கையை துவங்கினார்.

அப்போதெல்லாம் கல்லூரிகளில் ராகிங் என்ற பெயரில் செய்த அட்டூழியங்களுக்கு அளவே இல்லை. புதிதாக சேரும் மாணவர்களை சீனியர்கள் வெறும் தரையில் நீச்சலடிக்க சொல்லுவது , நடனமாட சொல்லுவது   போன்ற சிறுபிள்ளை தனமான  கல்லூரி வளாகத்தில்  நடைபெறும் கோமாளிதனங்கள் பலராலும்  சகித்து கொள்ளப்பட்டது. ஆனால் விடுதியில் ராகிங் எனும் பெயரில் சில விஷமிகளின் வக்கிர புத்தியும் கொடூர காமுக குணங்களும் அரங்கேறும். பல சமயங்களில் இவை எல்லை மீறி பல பேர் வாழ்கையில் நீங்காத வடுக்களை ஏற்படுத்தியதுண்டு ... தற்கொலை செய்துகொள்ளும் அளவுக்கு கூட போனதுண்டு ..

குமர குரு விடுதியில் சேர்ந்து  அன்றோடு இரண்டாம் வார இறுதி. அன்றுதான் "அஃபிஷியலாக" வருடம்தோறும் சீனியர்களால் ராகிங் நடைபெறும் நாள்.. 

"இன்னைக்கு கிளாஸ் முடிஞ்சி சேர்மன் ரூம்ல ... அவங்க என்ன செய்ய சொல்லுறாங்களோ அதை செஞ்சிட்டா எந்த பிரச்சனையும் இல்லை. இன்னிக்கு ஒருநாள்தான்.. அப்புறம் கவலை பட தேவையில்லை .."

அன்று காலையிலிருந்தே அரசல் புரசலாக புது மாணவர்கள் அந்த மாலையை எதிர்பார்த்து ஏதேதோ பேசி கொண்டிருந்ததனர். சிலர் ஆவலோடு எதிர்பார்த்தும் , சிலர் சற்று பயந்தும் காணப்பட்டனர். ஒருவரும் இதிலிருந்து தப்பிக்க முடியாது. சக மாணவன்  ஒருவன் குமர குருவின் காதை கடித்தான் ..

" முக்கியமா  ஹிட்லர் சல்யூட் அடிக்க சொல்லுவாங்க. .."

"அது ஈஸி தானே ..  ஒரு கையை உயர்த்தி ..."

"இது நீ நெனைக்கற மாதிரி இல்லை ..."

"அப்போ எப்பிடி ..?"

"வெயிட் பண்ணு இன்னிக்கி சாயங்காலம் நீயே தெரிஞ்சுக்குவே .."

அன்று மாலை சேர்மேன் தன்ராஜ் அறைக்கு ஜூனியர்கள் அனைவரும் கூடினர். குழுக்களாக பிரித்து அவன் அறைக்குள் அனுப்பபட்டனர்.

அறைக்குள் நுழைந்ததும் குமர குருவுக்கு மூச்சு முட்டியது . எங்கும் ஒரே சிகரெட் புகை மண்டலம் . அங்கங்கே காலி மது பாட்டில்கள் தரையில் சிதறி கிடக்க  சுவர் முழுவதும் அரை நிர்வாண பெண்களின் போஸ்டர்கள் . ..

சீனியர்கள் பலர் கட்டிலில் அமர்ந்திருக்க  எதிரே பலி கடாக்கள் போல் ஜூனியர்கள் நிற்கவைக்க பட்டிருந்தனர் . ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையில் ராகிங் செய்யப்பட்டனர் . சிலர் கழை கூத்தாடி குரங்கை போல் "பல்டி" அடிக்க , புகை பழக்கம் இல்லாதவர்கள் வாயில் வலுக்கட்டாயமாக சிகரெட் திணிக்கப்பட்டது ..மது சுவை அறிந்திராதவர் வாயில் மது ஊற்றப்பட்டது. குமர குருவும் மற்றவர்களும் இன்றோடு  இந்த  மூடர்களின் முட்டாள்தனம்  ஒரு வழியாக முடிந்தால் போதும் என்று பல்லை கடித்து கொண்டு அவர்கள் செய்ய சொன்ன கோமாளிதனங்களை ஒவ்வொன்றாய்  செய்ய   கடைசியில் போதையில் இருந்த  வைஸ் சேர்மன் எழுந்து,

"வெரி குட் .ஃ பிரெண்ட்ஸ் ..ஒத்துழைத்த அனைவருக்கும் மிக்க   நன்றி ..இன்னிலேந்து நம்ப எல்லோரும்  ஃ பிரெண்ட்ஸ்.. நம்ப சபை கலையறதுக்கு முன்னே கடைசியா நம்ப சேர்மனுக்கு எல்லோரும் ஹிட்லர் சல்யூட் வெச்சி மரியாதை செஞ்சிட்டு கெளம்பலாம் ..."  என்றான் தள்ளாடி கொண்டே .

வரிசையில் முதலில் இருந்த மாணவன் இதை ஏற்கெனவே எதிர்பார்த்தது போல் ஆடையை களைய ஆரம்பித்தான்   ...குமர குருவுக்கு தூக்கி வாரி போட்டது .

என்ன ஒரு கொடுமை .?   வக்கிர புத்தி கொண்ட கீழ்த்தரமான செயல்கள் ..?

முதல் ஆளை தொடர்ந்து பிறந்த மேனியில் எல்லா மாணவர்களும் வரிசையாக ஒரு கையை தூக்கி விறைப்பாக நாஸி சல்யூட் செய்து நிற்க, சேர்மன் தன்ராஜ் எழுந்து  சிகரெட்  புகைத்து கொண்டே ஒரு நாட்டின் தேச தலைவர் அணிவகுப்பை பார்வையிடுவது போல் ஒவ்வொருவராக பார்த்து கொண்டு கடந்து வர கடைசியாக நின்று கொண்டிருந்த குமர குருவின் இதய துடிப்பு சென்செக்ஸ் குறியீடு போல் தாறு மாறாக ஓடியது ..

கடைசியாக குமரகுருவின் எதிரே வந்து நின்ற  தன்ராஜ், திமிராய் குமர குருவின்     முகத்தில் சிகரெட் புகையை ஊதி ,

"நீ மட்டும் என்ன..?  மெரிட்ல வந்தா  பெரிய  கொம்பா ...?  கழட்டுடா ..." என்று உரக்க கத்த,

குமர குரு எதுவும் செய்யாமல் நிற்க ...."பளார் ....."  அறையில் பொறி கலங்கியது ..!!

அறை வாங்கியதோடு மட்டும் இல்லாமல் தன் மானம் பலர் முன்னிலையில் கடை  விரிந்த அவமானத்தால் கூனி குறுகி போக, அந்த வார இறுதியோடு விடுதியை காலி செய்து கிளம்பி அப்பாவிடம் உண்மையான காரணம் சொன்னால் சங்கட படுவார் என்பதற்காக  பொறியியல் பிடிக்கவில்லை என்று ஒரு காரணம் சொல்லி மருத்துவ படிப்புக்கு விண்ணப்பித்து படித்து  டாக்டரானது  ....அதெல்லாம் பழைய கதை ...

புது அத்தியாயம் , புது நண்பர்கள் , புது வாழ்கை..  இதெல்லாம் நடந்து பல வருடங்கள் உருண்டோடி விட்ட நிலையில் அந்த நிகழ்வை மறந்தே போனார் டாக்டர் குமர குரு .

எடுத்த துறை எதுவாக இருந்தாலும் தன்னை முழு மனதோடு ஈடு படுத்தி கொண்டால் வாழ்கையில் வெற்றி பெறலாம் என்பதற்கு சிறந்த ஒரு உதாரணம் டாக்டர் குமார குரு .

தன் திறமையாலும் அறிவாற்றலாலும் மருத்துவ உலகில் தனி இடத்தை பிடித்து மற்ற மருத்துவர்களால் முடியாது என்று கைவிடப்பட்ட பல கேஸ்களை சவாலாக எடுத்துக்கொண்டு பல நோயாளிகளுக்கு புது வாழ்வு தந்தவர் . உலகில் பல மருத்துவ ஜர்னல்களில் இவரின் ஆராய்ச்சி கட்டுரைகள் வெளியிடபட்டு உலக அரகில் பல அங்கீகாரங்களை பெற்று தனக்கென்று தனி இடத்தை பிடித்தவர்..


 சற்று சவாலுக்குரிய  கேஸ் என்பதால் அன்று அவசர பிரிவிலிருந்து அழைப்பு வந்த போது இந்த நிகழ்வு நடந்து பல வருடங்கள் ஆகி விட்டதாலும் , விபத்தில் பலமாக காயம் பட்டு முகம்  வீங்கியிருந்த தன்ராஜை அவருக்கு அடையாளம் கண்டு கொள்ள வாய்ப்பில்லை .

"ICU- வில் இத்தர பேருக்கு பேஷண்ட காணாம் பட்டில்லா.. ஒரு ஆள் கார் மட்டுமே காணம் பட்டு ..."

மருத்துவர்கள் ரவுண்ட்ஸ் வரும் நேரமென்பதால் நோயாளியை பார்க்க குழுமி  இருந்த கும்பலை விரட்டி கொண்டிருத்தாள் சேர நாட்டிளம் செவிலி.

ரவுண்ட்ஸின் போது  டாக்டர் குமர குருவின்  உடன் இரண்டு  மருத்துவ  மாணவிகள் கையில் பய பக்தியோடு நோட்ஸ் எடுத்து கொண்டிருந்தனர்.

தன்ராஜ்  கை கால்களில் கட்டுகளோடு படுத்திருக்க ஒரு குழாயில்  சிறு நீர்ப்பையில் இருந்து கட்டிலுக்கு அடியில்  சிகப்பு நிறத்தில் இரத்தம் கலந்த சிறுநீர்   ஒரு பிளாஸ்டிக் பையில் சேகரிக்க பட்டு  தொங்கியது . பக்கத்தில் பல வித திரவ மருந்துகளை  தானியங்கி இயந்திர பம்புகள்  மெல்லிய குழாய் மூலம் இரத்த நாளங்களில் செலுத்தி கொண்டிருந்தது . மானிட்டரில்  இதய துடிப்பு வரைபடம் , இரத்த அழுத்தத்தை குறிக்கும்  பலவித எண்கள் பளிசிட்டுகொண்டிருந்தது .

 டாக்கர் குமரகுருவை பார்த்ததும் எழுந்து நின்று மரியாதையுடன் வணங்கினாள்  தன்ராஜின் மனைவி .

"வணக்கம்மா ..சௌக்கியமா இருக்கீங்களா ..?ஆபரேஷன் எல்லாம் நல்ல படியா முடிஞ்சது . இரணம் ஆற இன்னும் கொஞ்ச நாள் ஆகும் . இன்னும் ரெண்டு நாள்ல ICU -ல வெச்சிட்டு அப்புறம் ரெகுலர் யூராலாஜி வார்டுக்கு மாத்திடலாம்  ."

" ரொம்ப நன்றி டாக்டர் இப்பத்தான் எழுந்து ரெண்டு வார்த்தை பேசினாரு . மறு படியும் தூங்கிட்டாரு. .."


வலிநிவாரண மருந்து, மயக்க மருந்துகளால்  முழுவதும் மயக்க நிலை தெளியாமல் இருந்த தன்ராஜ் இந்த சம்பாஷனை கேட்டு லேசாய் கண்விழிக்க  எதிரில்  குறுந்தாடியுடன் நின்றுருந்த டாக்டர் குமரகுருவும்  அவர் அருகில்  நின்றிருந்த இரண்டு மருத்துவ  மாணவிகளும் மங்கலாக தெரிந்தனர் .

 தன்ராஜ் கண் விழித்ததை பார்த்த அவன் மனைவி காதருகே போய்,

 "இவர்தான் டாக்கர் குமரகுரு... உங்களுக்கு ஆபெரேஷன் செஞ்ச பெரிய டாக்டர் ...." என்றாள் .

அதை புரிந்து கொண்ட தன்ராஜ் இரண்டு கரமும் தூக்கி கை கூப்ப முடியாத நிலையில் இடது கை,  வலியால் அடிவயிற்றை பிடித்திருக்க வலது கரத்தை சிரமப்பட்டு நீட்டி உயர்த்தி  அவருக்கு வணக்கம் செலுத்த பிரயர்த்தன  பட, பார்பதற்கு அது கிட்டத்தட்ட அந்த  "ஹிட்லர் சல்யூட் " போலிருந்தது .
                                       

                                                                   *******

Sunday, June 9, 2013

மழை காலம் (கவிதை )




ஈரம் காயாத உள்ளாடை ,

 வாகனம் வாரியிறைத்த

குழி சகதி ,

மேற்கூரை ஒழுக 

இருக்கையில்

தண்ணீர் துளியுடன்

பேருந்து  பயணம் ,

உரசி உரசி எரிய மறுக்கும்

நமத்து போன தீக்குச்சி,.....

இவையெல்லாம் மீறி

உள்ளம் குளிர

உணர்வுகள்  சிலிர்க்க

 மண்ணில்

விழுந்து தெறிக்கும்

மழைத்துளி ஸ்பரிசத்தில்

ஜனிக்கும் மழைக்கால

மண் வாசனைக்கு

மயங்காதார் யாருமுண்டோ ..?


அரக்கர் (கவிதை )


உம் மண்ணை ஆண்ட

இலங்கேஸ்வரன் கூட

பிறன்மனை கவர்ந்தும்

ஜனகன் மகள் 

விரல் தீண்டவில்லை இறுதிவரை...

சிறார்களை சின்னாபின்னமாக்கி

சீதைகளை சிதைத்து

சிதையுடன் புணர்ந்து 

அரக்கர் வம்சம்தான்  நாங்கள்

என  நீவிர் நிருபித்ததால்

நம்புகிறேன் ராமாயணத்தை...

கற்பு (கவிதை )






கண்ணகி முலை பாலை

எரிபொருளாக்கி மதுரை

எரித்தாய் ..

நீரோ மன்னன்

இசையில் மயங்கிய தருணம்

ரோமாபுரியை எரித்தாய்

அனுமன் வாலை தீப்பந்தமாக்க

இலங்கையை எரித்தாய்

ஏனோ சீதை உன்னுள் நுழைந்த கணம்

நீயே எரிந்து போனாய் ...?

காமம் (கவிதை )





படித்தால் மஞ்சள்

பார்த்தால் நீலம்

கதைத்தால் பச்சை

விற்குமிடம் சிகப்பு ..

வண்ணமிகு காதலுக்கு மட்டும்

நிறமொன்றும் இங்கில்லை

காமத்துக்கு

இத்தனை நிறங்களா ...?

Sunday, June 2, 2013

ஒன்பதுல குரு ...(சிந்தனை துளி )

ஒருவரின் வாழ்க்கையில் நடைபெறும் நல்ல நிகழ்வு , அசம்பாவிதம் எதுவாக இருந்தாலும் " பொறந்த நேரம் அப்பிடி " என்று சொல்ல கேட்டிருக்கிறோம். இதை யோசித்து பார்க்கும் போது எனக்கு ஒரு கதை நினைவுக்கு வருகிறது.

ஒரு ஊர்ல ஒரு ராஜாவாம் ..அவருக்கு ஒரு ராணியாம் ..( அட நெஜமாவே இப்படித்தானுங்க இந்த கதை ஸ்டார்ட் ஆகுது ...) ரத ,கஜ ,துரக பதாதிகளோடு செங்கோலோச்சிய மன்னனுக்கு ஒரு குறை. பல    வருடங்களாக குழந்தை பாக்கியம்  இல்லை. அவர்கள் வேண்டாத தெய்வங்கள் இல்லை . செய்யாத யாகங்கள் இல்லை. நல்லாட்சி புரியம்  மகாராஜாவுக்கும் மகா ராணிக்கும் புத்திர பாக்கியம்  வேண்டி மக்களும் விடாது பிரார்த்தனை செய்தனர். பாலை வார்த்தது போல் ஒருநாள் அந்த நற்செய்தி வந்தது. ஆமாம் ..மகாராணி கர்ப்பம் தரித்தாள்.  அரியாசனத்தில்அமரபோகும அடுத்த வாரிசை எதிர்  பார்த்து நாடே ஆவலோடு காத்திருந்தது. பிறக்கபோவது இளவரசிதான் என்றும் இளவரசன்தான் என்றும் IPL ஆட்டம் போல் குடிமக்களில் சிலர்  பந்தயம் கட்டினர். குழந்தை பிறந்தவுடன் அந்த நாழிகை குறித்து கொள்ளப்பட்டு பின்பு ஜோதிடர் ஜாதகம் கணிப்பது மரபு. அதிலும்  ராஜ வம்சம் , அரிய மகப்பேறு. சொல்லவா வேண்டும்? நாடெங்கிலும் இருந்து பெரிய ஜோதிடர்கள் முன் கூட்டியே வரவழைக்கப்பட்டு அரண்மனையில் தங்க வைக்கபட்டுருந்தனர்.  . அரண்மனையில் பிரசவத்திற்காக சகல வசதிகளோடு பிரத்தியேகமாக ஒரு அறை  தயார் செய்யப்பட்டு ராஜ வம்சத்தின் முதல் வாரிசை    பிரசவிக்க  தயாரானாள் மகராணி.அந்த நாளும் வந்தது. மகாராணிக்கு பிரசவ வலி வந்ததும் அனைத்து ஜோசியர்களும் வரவழைக்கப்பட்டு பிரசவ அறைக்கு வெளியே கூடினர் . கொழு கொழுவென்று சகல சாமுத்திரிகா லட்சணங்களுடன் அமுல் பேபி போல் ஒரு ஆண் குழந்தை பிறந்தது . குழந்தை   ஜனித்த நாழிகை அரண்மனை தாதி எலுமிச்சை பழத்தை வெளியில் உருட்டி விட அந்த  நேரத்தை எல்லா ஜோசியர்களும் கவனமாக குறித்து கொண்டனர். ஜோதிடர்கள் அனைவரும் மும்முரமாக ஜாதகம் கணிக்க தொடங்கினர். ஆனந்தத்தில் மகாராஜா  தாதிக்கு கழுத்திலிருந்த தங்க காசு மாலையை பரிசளித்ததோடு அதற்கு வரி விலக்கும் அளித்தார். (தாதி அவர்களுக்கு விரைவில்  அடுத்த வாரிசு உருவாக மனதுக்குள் வேண்டிகொண்டாள்.)

 தாரை தப்பட்டை  முழங்க பொது மக்களுக்கு இந்த நற்செய்தி அறிவிக்கப்பட்டது. நாடே விழாகோலம் பூண்டது.

அடுத்த ஓரிரு தினங்களில் எல்லா ஜோதிடர்களும் அரசவையில் கூடினர். நடுநாயகமாக அரியாசனத்தில் மாகாராஜா கம்பீரமாக வீற்றிறுக்க  ஜோதிடர்களின் முகத்தில் தவழ்ந்த சந்தோஷத்தை கவனித்த மகாராஜா அது  நல்ல செய்தியின்  அறிகுறியாக தெரிய உள்ளுக்குள் நிம்மதி பெரு மூச்செறிந்தார். அதே போல்  ஓலை சுவடிகளை கைகளில் கட்டாக வைத்திருந்த மூத்த ஜோதிடர் சபையில் எழுந்து  "மகாராஜா ...இளவரசர் வருங்காலத்தில் சகல நற்குணங்கள் கொண்டு வீர தீர பராக்கிரமசாலியாக திகழ போவது உறுதி. தங்களை போல் சகல வல்லமைகளையும் கொண்டு குடிமக்கள் வாழ்த்த சீரும் சிறப்புமாக நல்லாட்சி புரிவார். இது எங்கள் எல்லோருடைய ஒருமனதான கணிப்பு " என்றார். அரசரும் அகமகிழ்து எல்லோருக்கும் பணமுடிப்பை தன் கைகளால்
வழங்கி கௌரவித்தார். எல்லோரும் ஒவ்வொருவராக  பணமுடிப்பை பெற்று கொண்டு நன்றி கூறி "அப்போ நாங்க பொறப்படுரோம்" என்று சொல்லி  விடைபெற , கடைசியாக ஒரு ஜோதிடர் மட்டும் பண முடிப்பை பெற்றுக்கொள்ள மறுத்து விட்டார். அரசருக்கு அதிர்ச்சி. "ஜோதிடரே ஏன் பண முடிப்பு வேண்டாம் என்கிறீர்கள் ..? வேறு ஏதாவது வேண்டுமா ? எதுவாக இருந்தாலும் கேளுங்கள் . தருகிறேன் " என்றார் .

அதற்கு அந்த ஜோதிடர் "மன்னா ..என்னை மன்னித்து விடுங்கள் . என் கணிப்பு வேறு ..இதை சொல்லி உங்கள் சந்தோஷத்தை குலைக்க விரும்பவில்லை "

"பரவாயில்லை ..சொல்லுங்கள் ..."

"என் கணிப்பின் படி    இளவரசர் இந்த உலகில் வாழபோவது பன்னிரண்டு ஆண்டுகள்  மட்டுமே. பதின்ம வயது பாலகனாக மாறுவதற்கு முன் ஒரு  வன விலங்கால் அவருக்கு துர்மரணம் நிகழும் ..கிரக நிலைகள் கொண்டு நான் கணித்த ஜாதகம் சொல்கிறது . இதை சொல்வதற்கு என்னை மன்னித்து விடுங்கள் ..."

:"ஜோதிடரே என்ன பேசுகிறோம் என்று தெரிந்துதான் பேசுகிறீரா ...? இத்தனை ஜோதிடர்களின் கணிப்பு பொய்யா ..? யாரங்கே ..!! இந்த பித்தனை சிறையில் அடையுங்கள்!! " என்று உத்தரவிட அரண்மனை  காவலர்கள் ஜோதிடரை இழுத்து சென்றனர். அரசர் ஜோதிடனிடம் சூளுரைத்தார் .

"உம் கணிப்பு பொய்த்தால்  யானை கொண்டு உம் சிரம் இடற,  அந்த துர்மணம் உமக்கு நிகழும் ..இழுத்து செல்லுங்கள் இவனை ''  என்று   உத்தரவிட ,

கச்சையணிந்து கவரி  வீசிய இளம் தாதியர் உட்பட அனைவரும் அதிர்சியில் உறைந்ததனர்.

அந்த   ஜோதிடனை  பித்தன் என்றே முடிவு   செய்து எள்ளி நகைத்து  அவன் சொன்னதை ஒரு பொருட்டாக யாரும் எடுத்து கொள்ளவில்லை.  நாட்கள் பறந்தது . இளவரசருக்கு குதிரையேற்றம் , வாள் வீச்சு , வில்வித்தை என்று  ஆய கலைகள் அனைத்தும் கற்று தரபட்டு அனைவரும் வியக்கும் வகையில் அனைத்திலும் தேர்ச்சி பெற்று விளங்கினார். பன்னிரண்டாம் வயது முடிவடைந்து பதின்ம பருவ வயது அடைய இன்னும் சில தினங்கள் இருந்தன. மன்னருக்கு அந்த ஜோதிடன் சொன்ன வார்த்தைகளை முழுவதுமாக ஊதாசினபடுத்த முடியவில்லை.

கோட்டையில் உயரமாக மிக பாதுகாப்பான அறையில் இளவரசர் தங்க வைக்கபட்டார்.   வாளேந்திய வீரர்கள் இரா பகலாக கோட்டையை சுற்றி காவலிருந்தனர்.
இன்னும் ஒரு ஜாமம் கடந்தால் அந்த ஜோதிடன் சொன்ன கெடு முடிவடைந்து விடும். அன்று இரவு முழுவதும் மேலும் படைகள் குவிக்க பட்டு பல மைல்களுக்கு ஒரு ஈ , காக்கை கூட அண்டாதவாறு வீரர்கள் விழித்திருந்து காவல் காத்தனர். மறுநாள் அதிகாலை இளவரசரை எழுப்பபோன அரண்மனை சேவகர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர்.

 இளவரசர் கட்டில் மேல் பிணமாக ரத்த வெள்ளத்தில் ....!!

இத்தனை காவலையும் மீறி இது எப்படி சாத்தியம் ....?

மன்னரின் வீர தீர பராக்கிரமத்தை பறை சாற்றி வேட்டையாடப்பட்டு    அரண்மனை சுவற்றை அலங்கரித்த சிங்கம், புலி, மான் தலைகள் ..

இளவரசர் உறக்கத்தில் இருந்த போது  தலைமாட்டின் மேல் இருந்த கடம்பை மானின் தலை சுவற்றில் இருந்து விழுந்து அதன் கூறிய கொம்பு  இளவரசரின் இதயத்தை துளைத்து ...

 நாடே சோகத்தில் ஆழ்ந்தது.

ஒருபுறம் புத்திர சோகத்தில் வாட, மறுபுறம் ஒரு குற்றமும் புரியாத ஜோதிடனுக்கு  பன்னிரண்டு வருடங்கள் சிறை வாசம் விதிததற்காக குற்ற உணர்வு மன்னனை வாட்டி எடுத்தது. உடனே அந்த ஜோதிடனை விடுதித்து அரசவைக்கு அழைத்து வர உத்தரவிட்டார். ஜோதிடனை கண்டதும் தன்னை மன்னிக்கும்படி வேண்டிகொண்டார். ஜோதிடனும் இளவரசருக்கு நேர்ந்த துர்மரணம் கேட்டு மனமுருகி கண்ணீர் விட அரசர் ஜோதிடனிடம்

"ஜோதிடரே அது எப்படி உங்களால் மட்டும் அவ்வாறு சரியாக கணிக்க முடிந்தது ..?" என்று ஆச்சர்யத்தோடு வினவ ,

அதற்கு ஜோதிடர்  பன்னிரெண்டு ஆண்டுகள் பின்னோக்கி போய் இளவரசர் பிறந்த சம்பவத்தை நினைவு கூர்ந்தார் 

" மன்னா , இளவரசர் பிறந்த நாழிகை எப்படி குறிக்கப்பட்டது
என்பது தங்களுக்கு நினைவிருக்கிறதா ...?"

"ஆமாம் ..பிரசவம் முடிந்த கணம் தாதி எலுமிச்சையை வெளியே  உருட்டி விட்ட நேரம் ..."

"ஆமாம் ...சரியாக சொன்னீர்கள். ஆனால் தாதி எலுமிச்சையை முதலில் உருட்டி விடும் போது அது கதவில் பட்டு மீண்டும் உள்ளே சென்று விட்டது . இதை யாரும் கவனிக்கவில்லை . அவள் மீண்டும் அந்த எலுமிச்சையை தேடி எடுத்து இரண்டாம் முறை வெளியே உருட்டி விட்ட நேரத்தைதான்  மற்றவர்கள் குறித்து கொண்டு இளவரசரின்  ஜாதகத்தை கணித்தனர். அப்போது சில மணித்துளிகள் கடந்து விட்டது .ஆனால் துரதிருஷ்ட வசமாக இளவரசர் பிறந்த நேரம் அவருடைய  ராசிப்படி  கிரக நிலைகள் தோஷத்தின் உச்சகட்டத்தில் இருந்த கணம். "

கதை இப்படி முடிகிறது . ராசி பலன் , ஜாதகம் இதெல்லாம் மூட நம்பிக்கையா இல்லை இதில் ஏதேனும் உண்மை இருக்கிறதா என்கிற விவாததுக்கெல்லாம் போக நான் விரும்பவில்லை. அது அவரவர் நம்பிக்கை. ஆனால் ஒரு விஷயம் மட்டும் நிரம்ப ஆச்சர்யமளிக்கிறது. கலீலியோ டெலஸ்கோப் கண்டுபிடிப்பதற்கு பல நூறு வருடங்களுக்கு முன்பே வெறும் கண்களால் கிரகங்களை கண்டறிந்து நம் முன்னோர்கள் வான சாஸ்திரத்தில் சிறந்து விளங்கி இருக்கின்றனர். யோசித்து பார்த்தால் பிரபஞ்சத்தில் இருக்கும் பல துகள்கள் (particles ), தனிமங்கள் நம் உடலிலும்  உள்ளன. உதாரணம் Ca, Na, K, H2O, C, I , Fe..etc

உயிரற்ற ஜடமென்று நாம் கருதும் கிரகங்களும் ஏதோ ஒரு சக்திக்கு கட்டுப்பட்டு தொடர்ச்சியாக ஒரு ஹார்மானிக்  இயக்கத்தில் இயங்கி கொண்டிருக்கின்றன. நமக்கும் இந்த பிரபஞ்சத்துக்கும் இடையே ஏதோ ஒரு வகை ஒத்ததிர்வு இருந்து கொண்டுதான் இருக்கிறது .

ஒருவேளை அந்த கிரகங்களின் நிலைப்பாடும்  ஒவ்வொரு தனி மனித வாழ்வில் நடக்கும் நிகழ்வுகளுக்கும் ஒரு தொடர்பு இருப்பதாக வைத்து கொண்டாலும் அதை தெரிந்து கொண்டு என்ன ஆக போகிறது ?மேலும் அதை அந்த ஜோதிடன் போல் துல்லியமாக கணித்து சொல்லும்  திறமை இங்கே எத்தனை பேருக்கு இருக்கிறது ..? மக்களின் அறியாமையை தனக்கு சாதகமாக்கி பணம் பண்ணும் கூட்டம்தானே இங்கே அதிகம் ?


இன்ன தேதியில் சாகபோகிறோம் இலை கண்டம் இருக்கிறது என்று தெரிந்துகொண்டு அந்த மன உளைச்சலில் பரிகாரங்கள் செய்து கொண்டு  வாழ்வதை காட்டிலும் வாழும் ஒவ்வொரு  நாளையும்  இதுதான் கடைசி நாள் என்று கொண்டு  வாழ்கையை அனுபவிப்பதே உத்தமம் என்பது என் சிற்றறிவுக்கு எட்டிய  தனிப்பட்ட தாழ்மையான அபிப்ராயம்.


இப்போது இது புது  ஃபேஷன். மருத்துவர் சொல்லும் உத்தேச பிரசவ தேதியில் ஜோசியர் குறித்து கொடுத்த நாளை தேர்ந்தெடுத்து 
இயற்கையாக பிரசவ வலி எடுத்து பிரசவம்  செய்து கொள்ளாமல்  நல்ல நேரத்தை தேர்ந்தெடுத்து சிசேரியன் செய்து கொள்வது.

இதிலெல்லாம்  எந்த அளவு உண்மை இருக்கிறது என்பது இந்த குழந்தைகள் வருங்காலத்தில் ஒரு பில் கேட்ஸ் ஆகவோ , அம்பானியாகவோ , சச்சினாகவோ, சானியா மிஸ்ராவாகவோ வருவார்களா என்பதை பொறுத்திருந்து பார்த்துதான் சொல்ல முடியும்.

                                                              ***

Monday, May 27, 2013

தப்பு தாளங்கள் (சிறு கதை )




அல்லிவட்டம், புல்லிவட்டம் , அயல் மகரந்த சேர்கை ,  நியூட்டனின் மூன்றாவது விதி , ஐன்ஸ்டினின் தியரி ஆஃப் ரிலேடிவிட்டி , பிதாகரஸ் தியரம் , தலையை சுற்றும் பென்சீன் வளைய சமன்பாடுகள் எல்லாம் மெனக்கெட்டு படித்து விட்டு கடைசியில் TNPSC எக்ஸாம் எழுதி வயிற்று பிழைப்புக்காக சம்பந்தமே இல்லாத குமாஸ்தா வேலை செய்து கொண்டிருப்போர் எத்தனை பேர்?
மனது நேசித்த விஷயமே தொழிலாய் அமைந்த பாக்கியம் எத்தனை பேருக்கு வாய்திருக்கிறது ...?
 மேல்  நாடுகளில் உள்ளது போல் குழந்தைகளின் ஈடுபாடு, திறமையை இளம் வயதிலேயே கண்டறிந்து தரம் பிரித்து அதற்கேற்ப கல்விமுறையை தேர்ந்தெடுத்து  அவர்களின் எதிர்காலத்தை அமைத்து கொள்ளும் வகையில் அவர்கள கல்வி முறை இங்கேயும் இருந்தால்....

வாத திறமை இருப்பவர்கள் வக்கீலாகவும் அறிவியல் ஆர்வம் உள்ளவர்கள் அப்துல் கலாமாகவும் ஆக வாய்ப்பில்லாமல் ...எத்தனை  ஆயிரம் பேர் ..

பசுமையான அந்த பள்ளி நாட்கள்..
வாசு......

 அழகாக ஓவியம் வரைவான். அவனுடைய உள்ளங்கை மிருதுவாக இருக்கும் . பெண்மைக்கு உரித்தான நளினம்  கொஞ்சம் இருந்தாலும் கண்களில் தெரிந்த ஒரு வசீகரத்தில் தன்னையுமறியாமல் உடன் பயின்ற சில பெண்கள் அவனுக்கு காதல் கடிதம் கொடுக்க வைத்தவன் . மெனக்கெட்டு தண்டால், பஸ்கி  செய்து கட்டு மஸ்தாக உடம்பை வைத்திருந்த சில பேர் அவனை பார்த்து வயிறு எரிந்ததுண்டு . ஆனால் ஏனோ  அவனுக்கு அதிலெல்லாம் ஈடுபாடு இல்லை . ஓவியம் மட்டுமே அவன் உயிர் மூச்சு ..கடைகளின் பெயர் பலகைகள் , பானர்கள் என்று வரைவான் .  கை செலவுக்கு அவ்வபோது  ஏதோ கிடைக்கும் . ஓவிய கல்லூரியில் சேர்ந்து பெரிய ஓவியனாக வேண்டும் என்று ஆசை .வீட்டில் ஓவிய கல்லூரியில் சேர வேண்டும் என்று சொன்னபோது " நீ பெரிய பிக்காசோ-ன்னு நெனப்பா .? ஒழுங்கா பொழைக்குற வேலைய பாரு . "  கடிந்து கொண்டார்  தகப்பனார் வேறு வழியில்லாமல் ITI-ல் FITTER கோர்ஸ்ஸில் சேர்ந்தான் . .

நீண்ட நாட்களுக்கு பின்  ஒருமுறை அவனை சந்தித்த போது நலம் விசாரித்து  கை குல்லுகினேன் . உள்ளங்கை காப்பு காய்த்து சொர சொரப்பாய் ...
அமுதா....

கையெழுத்து முத்து முத்தாய் கண்களில் ஒற்றி கொள்ளலாம் போல் இருக்கும் . எப்போதுமே வகுப்பில் முதல் ரேங்க் . கிளாஸ் டெஸ்ட் முடித்து திருத்தி பேப்பர் கட்டுகளை பிரித்து எல்லோருக்கும் கொடுத்து முடித்தவுடன் 98 மார்க் வாங்கினாலும் அரை மார்க் குறைந்ததை கண்டுபிடித்து வாத்தியாரிடம் சண்டை போட்டு மல்லுக்கு நிற்பாள்.

படிப்பு ஏறாத இதர சராசரி மாணவர்களுக்கு  பிரம்படி கொடுத்து தங்கள் ஆளுமையை நிலைநாட்டி கொள்ளும் ஆசிரியர்களின் கண்களில் விரலை விட்டு ஆட்டியவள். 
மதுரை சொக்க நாதர் பாடி நக்கீரனார் பொருட் குற்றம் கண்ட  பாடல்

"கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி

காமஞ் செப்பாது கண்டது மொழிமோ

பயிலியது கெழீஇய நட்பின் மயிலியல்

செறிஎயிற் றரிவை கூந்தலின்

நறியவும் உளவோ நீயறியும் பூவே"

இப்படி பாண்டிய மன்னனுக்கு வந்த ஐயம் போல அவளுக்கு அடிக்கடி வரும் ஐயங்களை கண்டு வகுப்பறையில் ஆசிரியர்களுக்கு உள்ளூர ஒரு உதறல் உண்டு.
ஒருமுறை சிக்னலில்.....அடையாளமே   தெரியாமல் நிறை மாத கர்ப்பிணியாக  அமுதா .. ..ஒரு நிமிடம்தான் பேச முடிந்தது . என்பீல்ட் மோட்டார் பைக்கில்  வயது வாரியாக பெட்ரோல் டாங்க் மீது  குழந்தைகள் , முறுக்கு மீசையோடு கழுத்தில் நரிப்பல் டாலரில் தங்க செயின், கையில் கனமான தங்க ப்ரேஸ்லெட் போட்டு விறைப்பாக இருந்தார் அவள் கணவர் .  சொந்த மாமாவாம் .  நல்ல வேளை அந்த ஆள் ஒருமாதிரி முறைத்ததை கவனிக்காமல் மேலும் அமுதா பேசுவதற்குள் பச்சை விழுந்தது.

பாஸ் மார்க் 35. அதில் சில பேருக்கு என்னதான  வழித்து எடுத்தாலும் 33-க்கு மேல் தேறாது .அப்போதான்  ஆசிரியர்கள் கடவுள் மாதிரி .   போனால் போகட்டும் என்று  மிச்சம் ரெண்டு மார்க்கை பிச்சை மாதிரி போட்டு மாதா பிதாவுக்கு அடுத்து தெய்வத்தை முந்துவர். அந்த மாதிரி பாஸ்   செய்த படுபாவி பிரகாஷ் இப்போ பிரபல குழந்தை நல மருத்துவர் !!  பி .கு: அப்பா பருப்பு மண்டி முதலாளி . . பணம் பாதாளம் வரை பாயும் ...

மார்கபந்து ..

தாள வாத்தியங்கள் பிரமாதமாக வாசிப்பான் .  ஆண்டு விழாவின் போது
ஆசை நூறு வகை பாட்டுக்கு ட்ரம்ஸ் வாசித்து ஸ்டிக்கை விரல்களில் சுழற்றி வித்தைகள் செய்து மாணவர்களில் விசில்களையும் கரகோஷத்தையும் பெற்றவன் .
சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் மதுரை பாயிண்ட்-டு-பா
யிண்ட் வண்டியில் ஏறிய போது டிரைவர் சீட்டில் ஒரு பரிச்சயமான முகம் .
"நீ மார்கபந்து தானே . நீ டிரைவரா ..  என்ன ஆச்சு ..? மியூஸிக் டைரக்ட்ரா ஆகணும்முனு சொல்லிட்டு இருந்தியே ...?
" நீ வேற ....கல்யாண கச்சேரி கெடைக்கறது கூடபெரும்பாடா இருக்கப்பா .. இப்பல்லாம் கீ போர்டுலேயே ஒப்பேதிடுரானுங்க..நிரந்தர வேலை இல்லாம மியூசிக் ட்ரூப் -ன்னு அலையுரவனுக்கு எவன் பொண்ணு குடுப்பான் ...? அதான் அதையெல்லாம் தூக்கி போட்டுட்டு ஸ்டீயரிங் வீலை புடிச்சிட்டேன் . வயிறு ஒண்ணு இருக்கு இல்ல ...?"
விரல்கள் ஸ்டீயரிங் வீலில் தாளத்தை போட்டு கொண்டிருந்தது .

நான்...
முதல் சிறுகதையை படித்து விட்டு தமிழாசிரியர் கணேசன் பாராட்டிய மறக்க முடியாத அந்த வார்த்தைகள் ..
" உன் எழுத்துல ஒரு ஆழமும் யதார்த்தமும் இருக்கு . உனக்கு நல்ல எதிர் காலம் இருக்கு.. இன்னும் நெறைய எழுது . பாமரனுக்கும் புரியற மாதிரி எழுது... உன்னை சுத்தி நடக்கற விஷயங்களை எழுது. எழுத்து உன் காலத்தையும் கடந்து நிக்கும் .மனுஷங்களோட சந்தோசம், துக்கம் உன் சொந்தகளுக்கு நடந்த துயரம், வாழ்கையில் நீ சந்தித்த மனிதர்கள் , ஹாஸ்யம் , உன் தோல்வி , வெற்றி , கோபம் ,சமூக அவலம், அரசியல் இப்படி எதை பத்தியாவது அனுபவித்து எழுது . மனிதர்களின் குணாதிசயங்களை படி ..எத்தனை விதமான மனிதர்கள்..... வித விதமான பழ மரங்கள் மாதிரி ..நல்லவர்கள், தீயவர்கள் , சந்தர்ப்பம் கிடைக்காததால் வெளியில் நல்லவர்கள் வேடத்தில் திரிபவர்கள்.. பிரத்தியாருக்கு தெரியாம  எந்த பிரதிபலனும் எதிர் பாக்காம தான தர்மங்கள் செய்யறவங்க ..கோயிலுக்கு நாலு ட்யூப் லைட் வாங்கி கொடுத்துட்டு செவப்பு பெயிண்ட்ல இன்னார் உபயம்ன்னு எழுதி தம்பட்டம் அடிச்சிகிரவங்கன்னு எந்தனை வித விதமான மனிதர்கள் ...

யாருக்கு தெரியும் ? உன் எழுத்து பலருக்கு வடிகாலாகவும் அவங்க சிந்தையில ஒரு நல்ல தாக்கத்தை ஏற்படுத்தலாம் . ஏதோ பிறந்தோம் வாழ்ந்தோம் போனோமுன்னு இல்லாம உனக்கு யாருன்னே தெரியாத பல பேரோட சிந்தையை மகிழ்ச்சி படுத்துவதும் ஒரு வித சேவைதான். புகழுக்காக , பேருக்காக எழுதாமல் உன் ஆத்ம திருப்திக்காக எழுது . திருநெல்வேலியிலே பேரே இல்லாத இனிப்பகம் இருக்கு "இருட்டுக்கடை" ன்னு ..ஆனா அந்த கடை அல்வா உலக பிரசித்தி . அது போல உன் எண்ண பிரவாகத்தை எழுத்தா பதிச்சு வை ..பூவை தேடி வண்டு தானா வர்றா மாதிரி உன் திறமையை 
பார்த்து இந்த உலகம் ஒருநாள் உன்னை திரும்பி பார்க்கலாம்..
நிறைய படி .."
லக்ஷ்மி, இந்துமதி , சிவசங்கரி , சாண்டில்யன் , கல்கி, ராஜாஜி, அசோகமித்திரன் என்று பல எழுத்தாளர்களின் படைப்புகளை படித்து நிறைய படித்து கற்று கொண்ட விஷயங்கள் ...

பருவ காலத்தில் புஷ்பா தங்கதுரை , ஹரால்ட் ராபின்ஸ் போன்ற எழுத்தாளர்கள் கற்று கொடுத்தது "வேறு " விஷயம் ...
பின்பு கை வலிக்க எழுதி தபாலில் பத்திரிகைகளுக்கு அனுப்பி ஆவலோடு இந்த வாரம் பிரசுரமாகுமா அடுத்த வாரம் பிரசுரமாகுமா என்று ஒவ்வொரு வாரமும் வார பத்திரிகை வாங்கி ஏங்கி ..தபாலில் எழுதிய எழுதிய கதை பிரசுரமாகாமல் திரும்பி வர மனதொடிந்த நாட்கள் . .கடைசியாக முதல் சிறுகதை பிரசுரமாக  வானத்தில் சிறகடித்து பறந்த சந்தோஷம்.. முதல் பிரசவம் கண்ட தாயை போல ..அந்த உற்சாகத்தில் மேலும் சில கதைகள் ..இலட்ச கணக்கில் சம்பாதிக்கும் பத்திரிகைகள் ஊனை உயிரை உருக்கி மூளையை கசக்கி படைக்கும் படைப்பாளிக்கு கொடுப்பதோ ஏதோ நாய்க்கு போடும் பிஸ்கட் போல..எழுதுவதை முழு நேர தொழிலாக கொண்டு ஜீவிதம் நடத்தி வெற்றி பெற்றவர் வெகு சிலரே ..
எழுத்தாளன் என்றாலே ஒரு ஜோல்னா பையை மாட்டிகொண்டு
சோடா புட்டி கண்ணாடி, தாடியில் ஜிப்பா போட்டுக்கொண்டு  எப்போதும் கற்பனை உலகில் சஞ்சாரிக்கும் அப்பிராணியாக சித்தரிப்பது இந்த சினிமா காரர்களின் வேலையாக போய் விட்டது...
 
சினிமா ...

எழுத்தாளனாய் குப்பை கொட்டுவது நடைமுறைக்கு சாத்திய படாமல் போக சினிமாவில் முயற்சித்தால் என்ன? ..ஒரு நப்பாசை ...
"பேரு என்ன ..?"

"ஜோதி குமார்"
"சினிமாவுக்கெல்லாம் பேரு கொஞ்சம் கேட்சியா இருக்கணும் .. ஜே . கே-ன்னு வச்சிக்கோ ..இந்த கதை நீயே சொந்தமா எழுதினதா ...? "
" ஆமாம் சார் .."
"சரி கதையை காப்பி ரைட் ரெகிஸ்டர் பண்ணி இருக்கியா ..?"

"இல்லை சார் இதுதான் சினிமாவுக்கு நான் எழுதிய முதல் கதை .."
" சரி டைரக்டர் கிட்டே காமிக்கிறேன் . நல்லா நீட்டா டைப் பண்ணி இருக்கே .அவருக்கு புடிச்சிருந்தா தகவல் வரும் ..போயிட்டு வா ..."
தகவல் வரவில்லை . ஆனால் அந்த அசிஸ்டண்ட் டைரக்டர் அந்த கதையை அப்பட்டமாக திருடி தன் பெயரில் டைரக்ட் செய்து வெளிவர அந்த படம் மெகா ஹிட். ஒரு பக்கம் வஞ்சிக்க பட்டதில் வேதனை இருந்தாலும் அது என் கதை என்பதில் உள்ளுக்குள் ஒரு பெருமை .
தியேட்டரில்  இது  என் கதை என்று உரக்க கத்தி சொல்ல வேண்டும் போலிருந்தது.

யாரும் நம்ப தயாராய் இல்லை. கோபத்தை மறந்து பிரபலமாகி விட்ட அந்த டைரக்டரை பார்த்து அசிஸ்டெண்டாக சேர்த்துக்கொள்ள கேட்கலாமென்று போனால் கேட்டில் வாட்ச்மேன் விரட்டியடித்தான்.
 
அப்பா கத்தியதிலும் நியாயம் இல்லாமல் இல்லை .

"காலா காலமா சினிமாவில ஊருனவங்களே அட்ரஸ் தெரியாமே   போயிருக்காங்க ..ஒழுங்கா எல்லாத்தையும் மூட்டை கட்டிட்டு
உருபடுற வழியை பாரு ..ஏட்டு சுரக்காய் கறிக்கு உதவாது ..."
                                                            
                                                                  ***
"ஏய் ...ஜே .கே ......!!"
தோளை பிடித்து உலுக்கியது உலக்கை போன்றதொரு கரம் .

வைகை எக்ஸ்பிரஸ் போல் கட கடவென்று  ஓடிக்கொண்டிருந்த எண்ண ஓட்டத்தின் நடுவே என்ன ஒரு தடங்கல் ...?

வார்டு சிஸ்டர் ரீட்டா ... மஞ்சள் பூசிய முகத்தில்
நெற்றியில் ஒரு ரூபாய் அளவில் பெரிய குங்கும பொட்டு.
தலையில் பொருத்தமே இல்லாத நர்ஸ் கேப்பில் கிட்டத்தில் பார்க்க திகில் பட க்ளோஸ்- அப் ஷாட் போலிருந்தது .
"ஜே . கே ...உன்னை எங்கெல்லாம் தேடுறது....? இவ்வளோ நேரம் பிரேக் ரூம்ல என்ன பண்ணிக்கிட்டு இருக்கே ....?  பன்னண்டாம் நம்பர் பேஷண்டு உன்னதுதானே ....?
"ஆமாம்  சிஸ்டர்....."
"ஒரு மணி நேரத்துக்கு முன்னாடி Bed Pan - ஐ கொடுத்துட்டு நீ  இங்க வந்துட்டே ...அந்த பேஷண்டு ஆய் பண்ணிட்டு லபோ திபோன்னு அங்க கத்திகினு கெடக்குது ...போய் வேலைய பாரு ..சீப்ஃ ரவுண்ட்ஸ் வர்ர நேரமாச்சி .."

"ஆர்த்தோ வார்டுல  பையனுங்களை எடுத்தா உபயோகமா இருக்கும்னு பாத்தா  இவனுங்க என்னடான்னா  மோட்டுவளையை பார்த்து எவளையாவது யோசிச்சிகிட்டு  இங்க வந்து  நம்ப உசுரை எடுக்க வேண்டியது ...." காதில் விழும்படி முணு முணுத்துக்கொண்டே ஆடி அசைந்து வார்டு சிஸ்டர் ரீட்டா போக பின்னால் பார்ப்பதற்கு குட்டி யானை மீது கூடாரம் கவிழ்தது போலிருந்தது.

 லேடெக்ஸ்  கையுறையை உருவி கைகளில் மாட்டிக்கொண்டு பனிரெண்டாம் பெட்டுக்கு ஓடினேன்.
.
                                                                           *******


Sunday, May 12, 2013

குருவி (குறு நாவல்)

         





                                                                     (1)

ஈஸி சேரில் படுத்து பேப்பர் படித்து கொண்டிருந்தார் சித்தப்பா.

"வாடா கோபி ..எங்கே ரொம்ப நாளா ஆளே காணோம் ..? ஊர்ல எல்லோரும் சௌக்யமா ..?"

" கொஞ்ச நாளா கம்பெனிலே வேலை ஜாஸ்தி சித்தப்பா   நானும் ஆத்தூர் போய் ரொம்ப நாளாச்சி ...  ..இப்பதான் ரெண்டு நாள் ஆப்ஃ கெடைச்சுது ..இந்த பக்கம் கொஞ்சம் வேலை இருந்தது ..அப்படியே உங்களை பாத்துட்டு போகலாமுன்னு ..விஜி எப்பிடி இருக்கா ..? புது வேலை எப்படி இருக்காம் ...?

சித்தியும் குரல் கேட்டு உள்ளிருந்து   வந்தாள்.

"வாடா கோபி ..எப்படி இருக்கே  ...? விஜி கூட இப்போ வர நேரமாச்சி .  இந்த புது   வேலை ஜாயின் பண்ணி சந்தோஷமாதான்   போயிட்டிருந்தா ..ஏன்னு தெரியலே கொஞ்ச நாளாவே கொஞ்சம் டல்லா இருக்கா கேட்டா எதுவும் சொல்ல மாட்டேங்குறா  .   நீதான்  அவ கிட்டே பேசணும் .
என்னமோ போ... அவளுக்கு நல்ல வரனா பாத்து ஒரு கல்யாணத்தை பண்ணி முடிச்சி உன் கல்யாணத்தையும் பாத்துட்டா நாங்க கொஞ்சம்    நிம்மதியா  மிச்ச காலத்தை கழிப்போம்.சொந்தத்துல அத்தனை பொண்ணுங்க இருக்கு.. நீ என்னடான்னா விஜிக்கு கல்யாணம் பண்ணிட்டுதான் கல்யாணம் பண்ணிக்குவேன்னு பிடிவாதம் பிடிக்குற...." 
இது சித்தி .

"இவ வேற எல்லாத்தையும் பெரிசு படுத்திக்கிட்டு ..அவளுக்கு வேலையில எவ்வளவு டென்ஷனோ ..?  புள்ளாண்டான்  வந்ததும் வராதுமா ..
அப்புறம்  கோபி , வேற என்ன சங்கதி?  வேலையெல்லாம் எப்படி போயிட்டு இருக்கு ..? ஏம்பா ..அங்க தனியா இருந்து கஷ்ட படுறே ..இங்கதான் இவ்வளவு பெரிய வீடு இருக்கே பேசாம  இங்கே வந்துடேன் ...?" பரிவுடன்  கேட்டார் சித்தப்பா .

"அதை ஏன் சித்தப்பா கேட்குறீங்க .. டபுள் ஷிப்ட் போட்டு தாளிச்சி எடுக்கரானுங்க. மத்தபடி எல்லாம் ஓகே  இங்க இருந்து வேலைக்கு போறது கஷ்டம்  அங்கே எனக்கு பக்கம் .. .."

சிறிது நேரம் இருவரிடமும் பேசிவிட்டு கிளம்ப எத்தனிக்கையில் சித்தி கண்டிப்பாக தங்கி விட்டு போக அன்பு கட்டளை இட்டாள். கோபியும் மறுக்க முடியாமல் ஒப்புகொண்டான்.

"சரி சித்தி நான் கொஞ்சம் வெளியே போயிட்டு வந்துடறேன் .."  வெளியே கிளம்பினான் கோபி .

"சரிப்பா சீக்கிரம் வந்துடு நான் போய் டிபன் ரெடி பண்ணுறேன் ..."


                                                                   
                                                                     (2)


பொதுவாகவே  வாழ்கையில் குறிப்பிட்ட   சில உறவுகள் மீது சிலருக்கு   அதிகமான  பிடிப்பு  இருக்கும் . . அம்மா , அப்பா மற்றும்  கூட பிறந்த பந்தங்களை   விட அந்த உறவின் மேல் தனிப்பட்ட பாசமும் புரிந்துணர்வும் இருக்கும் .கோபியை பொறுத்த வரை அந்த உறவு சித்தப்பாதான்.

சித்தப்பா வயது வித்தியாசம் பார்க்காமல் ஒரு நண்பனை போல கோபியிடம்  பழகுவார்.  நிறைய விஷயங்களை மனம் விட்டு பேசி பகிர்ந்து 
கொள்ள கோபிக்கு ஆசானாகவும் வழிகாட்டியாகவும் நண்பனாகவும் ஒவ்வொரு 
கால கட்டத்திலும்  இருந்தவர். 


 கோபி வளர்ந்து ஆளாகி இன்று வரை அவன் வாழ்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் சித்தப்பாவின் பங்களிப்பு நிறையவே  உண்டு . இன்னும் சொல்ல போனால் அவன் அப்பா அம்மாவை விட கோபியின் விருப்பு வெறுப்புகளை அதிகம் புரிந்து கொண்டவர் சித்தப்பாதான் . கோபி பல சமயங்களில் யோசித்ததுண்டு எப்படியோ தவறி தன்  குடும்பத்தில் பிறந்து விட்டோம் என்று.

கோபியின்  சொந்த ஊர் திருச்சி பக்கம் ஆத்தூர் என்கிற சிறிய கிராமம். தாத்தாவின் பூர்வீக சொத்து  நஞ்சை புஞ்சை நிலங்கள் உண்டு. தாத்தாவிற்கு  அப்பா, சித்தப்பா இரண்டு  மகன்கள் மட்டுமே. சித்தப்பாவிற்கு திருச்சி சார்பதிவாளர் அலுவலகத்தில் குமாஸ்தா வேலை கிடைத்து அங்கேயே செட்டில் ஆகி விட்டார்.

அப்பா பஞ்சாயத்து மேல்நிலை பள்ளியில் கணக்கு வாத்தியார். கோபியின் அப்பா ரொம்ப கண்டிப்பானவர். கறார் பேர்வழி . வீட்டில் எல்லாமே தன் இஷ்டபடிதான்  நடக்க வேண்டும். வீட்டுக்கு யார் யார் வரவேண்டும் யார் வரகூடாது என்று ஒரு லிஸ்ட்டே போட்டு வைத்திருப்பார் . அம்மாவோ அவரை எதிர்த்து ஒரு வார்த்தை கூட பேசியது கிடையாது. அப்பா வேலை முடித்து வீட்டுக்கு  வருகையில் அவர்   மொபெட்  சத்தம் தூரத்தில் கேட்கும்போதே   வீடே நிசப்தமாகி விடும். 

 கோபி   சிறுவயதில் ஆசை பட்ட விஷயங்களை முதலில் அம்மாவிடம்தான் சொல்லுவான் . அம்மா பிறகு நல்ல சமயமாக பார்த்து நைசாக அவரிடம் கேட்பாள். " மொதல்ல அவனை
முதல் ரேங்க் எடுக்க சொல்லு அப்புறம் பாக்கலாம் .." என்று  சொல்லி விடுவார் .
ஆறு வயதில், வராத பதிநேழாம்  வாய்பாட்டை கையில் பிரம்பை வைத்து கொண்டு மனப்பாடமாக சொல்ல சொல்லுவார். கோபிக்கு அதனாலேயே கணக்கின்  மீது ஒரு வெறுப்பு வந்து இன்று வரை சின்ன கணக்கு  என்றாலும் செல்போன் கால்குலேட்டர் உதவி தேவைப்படும்.

வீட்டில் நிலவும் இந்த இறுக்கமான சூழ்நிலையில் இருந்து தப்பிக்க அப்போதெல்லாம்  கோபிக்கு ஒரே வடிகால்  திருச்சியில் இருக்கும் சித்தப்பா வீடுதான்.

.     சித்தப்பா அப்படியே கோபியின் அப்பாவிற்கு எதிர்மறை. அன்பால் எதையும் சாதிக்க முடியும் என்று நினைப்பவர். அதனால் ஒவ்வொரு  பள்ளி விடுமுறையின் போதும் கோபி திருச்சிக்கு  கிளம்பி விடுவது  வழக்கம். ஒவ்வொரு முறையும் விடுமுறைக்கு திருச்சிக்கு போகும் போதும்  ஒரே கொண்டாட்டம்தான். அதே போல் பொங்கல் , தீபாவளி என்றால் சித்தப்பா குடும்பம்  மற்றும் பெங்களூர் மாமா குடும்பம் எல்லோரும் ஒன்று கூடி கிராமத்துக்கு வந்து சந்தோஷமாக கொண்டாடிவிட்டு போவார்கள் . கோபிக்கு காமிக்ஸ் பிடிக்கும் என்று தெரிந்து முத்து காமிக்ஸ் இரும்புக்கை மாயாவி ,  டின்-டின்,   மந்திரவாதி மான்ரெக்ஸ் ,தமிழ்வாணனின் சங்கர்லால் துப்பறிகிறார்   என்று நிறைய புத்தகங்களை வாங்கி வைத்திருப்பார் சித்தப்பா.


கோபி படிப்பில் சுமார்தான்  +2வில் நல்ல  மதிப்பெண்கள் கிடைக்காததால் 
 எந்த அரசு பாலி டெக்னிக்கிலும் சீட் கிடைக்கவில்லை  தனியார் பாலிடெக்னிக்கில்  நன்கொடை  கொடுத்து சேர்க்க கோபியின் அப்பா
வுக்கு கண்டிப்பாக உடன்பாடில்லை  .


"வாத்தியார் புள்ளைன்னு வெளியே சொல்லாதே என் மானம்தான் போகும் .  விவசாயத்தை  பாக்க ஆள் இல்லை .நீ படிச்சி கிழிச்சது போதும்  பேசாம விவசாயத்தையாவது ஒழுங்கா பார் " ஆத்திரத்தில் கடிந்து கொண்டார்  அவனை.


கோபிக்கு தொழில் நுட்ப மூளை. சிறுவயதிலிருந்தே எப்போதும் எலெக்ட்ரானிக், எலெக்ட்ரிக் பொருட்களை கழட்டி எதையாவது நோண்டி   பழுது பார்ப்பதில் ஒரு ஆர்வம்.   விவசாயத்தில் ஓரளவு ஈடு பாடு இருந்தாலும்  கிராமத்திலேயே  வாழ்க்கையை முடித்து கொள்ள விருப்பமில்லை . மறுபடியும் சித்தப்பாதான் கை கொடுத்தார் . கோபியின் அப்பா எவ்வளவுதான் முன்கோபியாக இருந்தாலும் தம்பி மேல் உள்ளுக்குள் ஒரு பாசம் . தம்பி பேச்சை தட்ட மாட்டார்   அண்ணனிடம் பேசி ஒரு வழியாக  கோபியை  ஒரு தனியார் ITI ல் சேர்க்க சம்மதிக்க வைத்தார்.

ITI  முடித்ததும் பெரம்பூர் தொழில் பேட்டையில் ஒரு ஸ்டீல் பாக்டரியில் வேலை கிடைத்தது.


விஜி அப்போதிருந்தே படிப்பில் படு சுட்டி. பிளஸ் டூவில்   நல்ல மதிப்பெண் பெற்று கம்ப்யூட்டர் சயன்ஸ் படித்து   கோர்ஸ் முடிக்கும் முன்னரே காம்பஸ் இண்டர்வியூவில்  செலெக்ட் ஆகி சென்னையில் ஒரு கம்பெனியில் வேலை கிடைத்தது . அதற்கு பிறகு தன் திறமையால் படிப்படியாக உயர்ந்து பகுதி நேர  கோர்ஸில்  சேர்ந்து மேலும் தன் தகுதியை மேம்படுத்தி கொண்டதின் பலனால் பிரபல TKC குரூப் கம்பெனியில்   கூடுதல் சம்பளம் , சலுகைகளுடன் புரோக்ராம் டெவலப்பர் வேலை கிடைத்தது.

 சித்தப்பாவும் ,சித்தியும் விஜி லேடிஸ் ஹாஸ்டலில் தங்கி வேலைக்கு  செல்வதில் விருப்பமில்லாமல் திருச்சியில் இருந்த வீட்டை வாடகைக்கு விட்டு திருமணம் ஆகும் வரை மகளுடன் கூட இருக்க வேண்டி சென்னைக்கு குடிபெயர்த்து வந்தனர்.

கோபி ஏற்கனவே சென்னையில் இருந்ததால் சித்தப்பா கோபியிடம் வீடு பார்க்கும் பொறுப்பை ஒப்படைத்து இருந்தார் . அவனும் விடுப்பு எடுத்து பல
 இடங்களில் அலைந்து பல புரோக்கர்களை பார்த்து   நல்ல ஏரியாவாக தேர்வு செய்து கடைசியில் சைதாபேட்டையில்
அவர்கள்   இப்போது குடியிருக்கும் வீட்டை தேர்ந்தெடுத்தான் .

                                                                  (3)

பல  விஷயங்களில் சித்தப்பாவின் அறிவாற்றலையும் ஞானத்தையும் கண்டு பிரமிக்கும் கோபி , அவருடன் உடன் படாமல் போனது அவரது ஆன்மீக நம்பிக்கையுடன்  மட்டுமே.  நல்லநேரம், ராகு காலம்  பார்ப்பது, சகுனம் பார்ப்பது சாமியார்கள் பின்னே அலைவது  போன்ற அவருடைய  நம்பிக்கைகளை  பல சமயங்களில்  சீண்டி  வேடிக்கை பார்ப்பதில் கோபிக்கு ஒரு அலாதி   சந்தோஷம்.
அவரும் விட்டு கொடுக்காமல் எல்லாவற்றிற்கும்  ஏதாவது விளக்கம் சொல்லி சமாளிப்பார் .

கோபி எட்டாவது படிக்கும் போதே  சித்தப்பாவிடம் ஏதாவது  கேள்விகளை கேட்டு மடக்குவான் .

"சித்தப்பா ராவணனுக்கு பத்து  தலைன்னு சொல்றீங்க. நடுவுல  ஒரு தலை,  இந்த பக்கம் அஞ்சு, அந்த பக்கம் நாலு..... எப்படி பாலன்ஸ் ஆகும் .?  அப்புறம் திருமாலின்  நாபி கமலத்தில் முளைத்திருக்கும் தாமரையில் வீற்றிருக்கும் பிரம்மாவுக்கு நாலு தலை . தூங்கும் போது தலையணைல மூச்சு முட்டாதா ..?" என்று கிண்டலாக கேட்பான் .

அதற்கு அவரும்   . "புராண இதிகாசங்களில் இருக்கும் விஷயங்களை மேம்போக்காக பார்த்தால்  அபத்தமா  தோணும் .. எல்லாவற்றிற்கும் ஒரு ஆழ்ந்த உள்ளர்த்தம், வேதாந்தம் உள்ளடங்கி இருக்கு . ஆன்மீக கடல்ல  ஆழமா  முங்கி எழுபவனுக்குத்தான் முத்து கிடைக்கும் . ..கல்லை மட்டும் கண்டால் கடவுள் தெரியாது .." என்பார் .

"சித்தப்பு எல்லாத்துக்கும் ஒரு பதில் ரெடியா வெச்சி இருக்கீங்க ..சரி கலியுகம் முடிவில நிறைய  அக்கிரமங்களும் அநியாயங்களும் நடக்கும்   போது  உங்க திருமால் கல்கி அவதாரம் எடுத்து வருவாராமே . ..ஏன் இன்னும்   வெயிட் பண்ணிட்டு இருக்கார்?  இப்போ  நாட்டுல நடக்குற அநியாயங்கள், அக்கிரமங்கள் போதாது இன்னும் கொஞ்சம் நடக்கணும்னு காத்துட்டு இருக்காரோ ...?"

"நீ நெனைக்கறா மாதிரி பெருமாள் கல்கி அவதாரம் எடுத்து வானதிலேந்து வெள்ளை குதிரையில வந்து உலகத்தை காப்பாத்தணும்னு அவசியம் இல்லே ..ஒருவேளை இப்போ கூட  மனுஷர்கள் மத்தியிலே கலந்து  மனுஷர்கள் மாதிரியே  உலவி அநியாயம் பண்ணுறவங்களை தண்டிச்சி நல்லவங்களை அவங்களுக்கு தெரியாமலே உதவி செஞ்சிண்டு  இருக்கலாம் ....."

இந்த சம்பாஷனை நடந்து கொண்டிருந்தது முன்னொருநாள் திருச்சி மேல்மாசி வீதி.

 அப்போது அந்த பக்கம் ஒரு ஆட்டோ கடந்து சென்றது . கோபி அந்த ஆட்டோ டிரைவரை காட்டி அப்போ  அந்த ஆட்டோ டிரைவர் முப்பது முக்கோடி தேவர்களில் ஒருத்தரா இருக்கலாமுன்னு  சொல்லறீங்களா ...?"

"கண்டிப்பா..."


"சித்தப்பா ஒரு நிமிஷம்... கடையில எலுமிச்சம் பழம் வாங்கிட்டு வந்துடறேன் .."

"எதுக்கு ..?"

"சித்தி கிட்டே சொல்லி உங்க தலையில தேய்குறதுக்கு ....."

                                                                 (4)

கோபி சைதாபேட்டைக்கு   வரும்போதெல்லாம் தெருமுனையில் இந்த கடைக்கு வந்து சிகரெட் வாங்குவது வழக்கம் .

" பிருந்தா பார்மஸி   &  ஃ பான்சி  ஸ்டோர் "

கிங்ஸ்  ஃ பில்ட்டர் வாங்கி பணம்  கொடுத்த போது  வெள்ளை சட்டை, வேஷ்டி சந்தன   பொட்டு சகிதம் ரெஜிஸ்டரில் இருந்த முதலாளி புன்னகைத்தார் .

 
"தம்பி நீங்க இப்போ புதுசா திருச்சியில் இருந்து குடி வந்தாங்களே அவங்க வீடுதானே .. ?"
" ஆமா ...அது என் சித்தப்பா வீடு   எப்படி அது எப்படி உங்களுக்கு ......?"
"நான் இந்த ஏரியாவில ரொம்ப வருஷமா இருக்கேன் தம்பி  . பெரும்பாலும் எல்லாரையும் தெரியும்.  நீங்க வண்டியில  சாமான் எல்லாம் கொண்டு எறக்கி உதவி செஞ்சப்போ நான் பாத்திருக்கேன் . அதுக்கப்புறம் ரெண்டு முறை நம்ப கடை பக்கமா வந்த போது பாத்தது . அப்போ அந்த பொண்ணு உன் தங்கை முறையா ..? "
 அந்த கேள்வி கோபிக்கு அனாவசியமாக பட்டதால்  கொஞ்சம் குரலை உயர்த்தி கேட்டான் கோபி "ஆமாம் .. எதுக்கு கேக்கறீங்க ...?"

"தப்பா நெனைக்காதீங்க தம்பி ரெண்டு நாளைக்கு முன்னே அந்த பொண்ணு நம்ப கடைக்கு வந்திருந்தது. டாயசீபம் மாத்திரை கேட்டது .
டாக்டர் ப்ரிஸ்க்ரிப்ஷன் இல்லாம நாங்க தரகூடாதுமானேன். " இல்லே அங்கிள் ..வேலையில  ஒரே ஸ்ட்ரெஸ் ..சரியா தூங்க முடியலே, டாக்டர் கிட்டே போக நேரமில்லைன்னு சொல்லிச்சு .. மத்த கடைங்கள்ள நம்ப கடை மாதிரி ரூல்ஸ் பாலோ பண்ணுவாங்கன்னு சொல்ல முடியாது.
ஏதோ உன் கிட்டே சொல்லணும்னு  தோணுச்சி அதான் சொன்னேன் .."


                                               
                                                                 (5)

கோபிக்கு பிடித்த சப்பாத்தி, பட்டாணி குருமா வாசனை தெரு வரை வந்து மூக்கை துளைத்தது .

கோபி திரும்பி போகவும் விஜி வீட்டுக்கு வரவும் சரியாக இருந்தது. வழக்கமாக விஜி கோபியை பார்த்த சந்தோஷத்தில் வள வளவென்று ஏதேதோ பேசி தீர்த்து விடுவாள். ஆனால் பிரகாசமான அவள் கண்கள் இருண்டிருந்தது.

 "என்ன எப்படி இருக்கே ? ஊர்ல எல்லாரும் எப்படி இருக்காங்க ..?" என்று ஏதோ பேசவேண்டுமே என்பதற்காக  பேசிவிட்டு "எனக்கு கொஞ்சம் ப்ராஜெக்ட் வேலை இருக்கு" என்று தன் அறைக்கு  போய் விட்டாள் விஜி.

டின்னர் சாப்பிடும் போது கூட  யாரும் அதிகம் பேசவில்லை.  எப்போதும் ஒருவரை ஒருவர் கேலி செய்துகொண்டும்,வம்புக்கிழுத்தும்  ஏதாவது  அறுவை ஜோக்குகளை சொல்லி சிரித்துகொண்டு கல கலப்பாக இருந்த குடும்பமா இது...?  விஜி ஏதோ ஒப்புக்கு சாப்பிட்டு விட்டு எழுந்து கை கழுவி அறைக்கு  போய் கதவை சாத்தி கொண்டாள். சித்தப்பாவும் சாப்பிட்டு முடித்து வெளியே ஒரு வாக் போக கிளம்பினார்.
"கோபி நான் படுக்கறேன். ரூம்ல மாத்திக்க கைலி,  டவல் எல்லாம் எடுத்து வெச்சிருக்கேன் நாளைக்கு இருந்து மதியம் சாபிட்டுதான் போகணும் சரியா ..?"  
என்று சொல்லி விட்டுசித்தியும் படுக்க போனாள்.
"சரி சித்தி நீங்க போய் படுங்க...நான் கொஞ்ச நேரம் நியூஸ் பாத்துட்டு படுக்கறேன்

..." மற்ற சமயமாக இருந்தால் சித்தப்பாவோடு கோபியும் வாக்கிங் போயிருப்பான் . ஆனால் விஜியின் மனதை குடைந்து கொண்டிருக்கும் விஷயம் எதுவாக இருக்கும் என்று தெரிந்து கொள்ளாமல் கோபிக்கு  தலையே  வெடித்து விடும் போலிருந்தது.


                                                                      (6)

சித்தப்பா வெளியே போகும் வரை காத்திருந்து மெல்ல நடந்து போய் விஜியின் அறை  கதவை தட்டினான் கோபி. கொஞ்சமாய் கதவை திறந்து முகத்தில் கேள்விக்குறியோடு கேட்டாள் .

"எங்க MD . வேலைக்கு சேர்ந்த புதுசுல கேள்விபட்டேன் அவன் பொம்பளைங்க விஷயத்துல ஒரு மாதிரின்னு.  நான் பாட்டுக்கு நான் உண்டு என் வேலை உண்டுன்னு இருந்தேன். கன்பர்மேஷன் முடிஞ்சு எனக்கு வர வேண்டிய கிராஜுட்டி என் அக்கௌன்ட் -ல க்ரெடிட்   ஆகலே  ஹெச் . ஆர் - ல  போய் கேட்டா எங்களுக்கு தெரியாது  சூபர்வைசர் கிட்டே கேக்க சொன்னாங்க. சூபர்வைசர்
மேடம் கிட்டே போய்  கேட்டா உனக்கு நல்ல நேரம்... உன் அதிருஷ்டம் நீ ஃப்ரெஷெர்...   நம்ப MD பார்வை உன் மேல விழுந்திருக்கு பார்த்து அட்ஜஸ்ட் பண்ணி நடந்துக்க. நீ எங்கியோ போயிடிவேன்னு " கண்ணடிச்சி சிரிக்கறா...  ஆத்திரம் தாங்க முடியாம நேரா நானே MD ரூமுக்கு போய்,

 "சார் ..என் கிராஜுட்டி பாக்கி ஹோல்ட்ல இருக்கு. சூபர்வைசர் மேடம் கிட்டே கேட்டா ஏதேதோ தப்பா பேசுறாங்க 'ன்னேன் அதுக்கு அந்த பொறிக்கி ராஸ்கல்,

 "அவங்க தப்பா சொல்லலை , சரியாதான் பேசி இருக்காங்க...
என்னை கொஞ்சம் அனுசரிச்சி நடந்துக்கோ உனக்கு நடக்க வேண்டியதெல்லாம் தானா  நடக்கும்னு சொன்னான் ..."

 இதை சொல்லும்போது அவமானத்தால் அவள் உடல் குறுகி போனது .

"போடா நீயும் உன் வேலையுமாச்சுன்னு ரிசைன் பண்ண வேண்டியதுதானே? " ஆத்திரத்தோடு இடைமறித்தான் கோபி.

" நானும் அதைதான் சொன்னேன். நான் வேலைய இன்னிக்கே  ரிசைன்
பண்ணறேன்னு சொல்லிட்டு  அவன் ரூமை விட்டு கிளம்பும் போது
 , ஒரு நிமிஷம் இதை கொஞ்சம் பாத்துட்டு போன்னு நக்கலா சிரிச்சிகிட்டே அவன் மொபைல்ல ஒரு போட்டோவை காமிச்சான்...

அவன் என் தோள் மேல கை போட்டுட்டு நெருக்கமா இருக்கற மாதிரி.. எனக்கு தூக்கி வாரி போட்டது ..
 கம்பெனி ஸ்டாப்ஃ   பர்த் டே பார்டியில என் ப்ரெண்ட் மாலா கூட எடுத்துகிட்ட போட்டாவை எடுத்து "போட்டோ ஷாப்" பண்ணியிருக்கான்.

  எப்படி என் வொர்க்..?  நான் நினைச்சதை அடையாம விட மாட்டேன். என்னை மீறி நீ வேற எங்கேயும் போயி நீ குப்பை கொட்ட முடியாது . என் வழிக்கு வரலேன்னா இதை விட அசிங்கமா எடிட் பண்ணி நெட்ல போட்டுடுவேன்... அப்புறம் உன் குடும்பத்தோட தூக்குல தொங்கணும் புரிஞ்சு நடதுக்கோனான்.

 "சார் உங்களுக்கு கல்யாணம் ஆகி ஃபாமிலி குழைந்தைங்க எல்லாம் இருக்கு ,  எங்க வீட்ட எனக்கு  மாப்பிள்ளை பாத்துக்கிட்டு இருக்காங்க என்னை விட்டுடுங்க ப்ளீஸ்ன்னு கால்ல விழுந்து கதறினேன்...

"நீ யாரை வேணாம் கல்யாணம் பண்ணிக்கோ ..என்னை மட்டும் அட்ஜஸ்ட் பண்ணிக்கோ உன்னை மகா ராணி மாதிரி வச்சிக்கறேன்னு... கொஞ்சம் கூட வாய் கூசாம சொல்லுறான் ..." மீண்டும் குமுறி அழுதாள் விஜி.
"தப்பு எதுவும் நடக்கலியே ..." தர்ம சங்கடத்தோடு கேட்டான் கோபி .

"சீ...அந்த மானம்  கெட்ட வக்கிர புத்தி புடிச்ச  நாயின்  விருப்பத்துக்கு இணங்குரதை விட சாகுறதே மேல்னு  முடிவு செஞ்சி ஒவ்வொரு  பார்மசியா போய் டாயசீபம்  மாத்திரைகள்   கலெக்ட் பண்ணி வெச்சிருக்கேன். இன்னும் மூணு வாரம் கம்பெனியில ISO இன்ஸ்பெக்ஷன் , ஆடிட்டிங்.. அதுவரைக்கும் அவன் தொந்திரவு இருக்காது. அதுவரைக்குமாவது அம்மா அப்பா கூட இருந்துட்டு அப்புறம் போய் சேந்துடலாம்னு பிளான் பண்ணி இருந்தேன்.. எனக்கு வேற வழி தெரியலஅண்ணே .." 

 குழந்தை போல்    குலுங்கி குலுங்கி அழுதவளை தோளில் சாய்த்து ஆசுவாச படுத்தினான் கோபி. உள்ளுக்குள் ஒரு எரிமலை குமுறியது.
"முட்டாள்.என்ன காரியம் செய்ய இருந்தே ..  பிரச்சனைக்கெல்லாம் தற்கொலைதான் முடிவுன்னா  இந்த உலகத்துல ஒருத்தர் கூட மிஞ்ச மாட்டாங்க. நம்மால தீர்க்க முடியாத சில பிரச்சினைகளுக்கு சில சமயம் காலம் நல்ல தீர்ப்பு தரும் அது வரைக்கும் பல்லை கடிச்சிக்கிட்டு  பொறுமையா இருக்கணும். நீ இந்த அண்ணன் கிட்ட சொல்லிட்ட இல்ல ...மத்ததை நான் பாத்துக்கறேன்."
"உன்னால அவனை ஒண்ணும் பண்ண முடியாது அவனுக்கு இண்டஸ்ட்ரில  ரொம்ப இன்ப்ளூயன்ஸ் இருக்கு. எங்க  கம்பெனி செக்யூரிட்டி தாண்டி வெளி ஆட்கள் ஒருத்தரும்    உள்ளே வர முடியாது "  என்றாள் விஜி கண்ணை துடைத்து கொண்டே .
"நமக்கு மூணு வாரம் டைம் இருக்கு.  என்ன செய்யலாமுன்னு யோசிக்கணும்.. அதுவரைக்கு ரொம்ப ஜாக்கிரதையா நடந்துக்க. இதுக்கு நடுவே  அவன் டார்ச்சர் பண்ணா, யோசிக்க கொஞ்சம் டைம் வேணும்னு   மட்டும் சொல்லு. மத்ததை நான் பாத்துக்கறேன். அது வரைக்கும் இந்த மாதிரி  எந்த முட்டாள் தனமான முடிவும் எடுக்க மாட்டேன்னு என் கிட்டே  சத்தியம் பண்ணு.." என்று கையை நீட்டினான் கோபி.
"ப்ராமிஸ்.." கை மேல் சத்தியம் செய்து .." இன்னும் இந்த பழக்கத்தை விடலையா.." என்றாள்  விஜி .
"எந்த பழக்கம் ..?"
 "இந்த சிகரெட் பழக்கம்..."
"எல்லாம் நல்லபடியா முடிஞ்சா விட்டுடறேன்.." சிரித்து கொண்டே சொன்னான் கோபி.
"ப்ராமிஸ் ...?  இந்தமுறை கோபி விஜியின்   கைமேல் அடித்து சத்தியம் செய்தான்.
முதல் முறையாக விஜியின் முகத்தில் ஒரு தெளிவும் லேசான புன்னகையும் தென்பட்டது.   புழுங்கி கொண்டிருந்த பாரம் இறக்கி வைத்ததால்   மனம் லேசானது போல் ஒரு உணர்வு. விஜியிடம் கேட்டு  அந்த MD  மற்றும்   கம்பெனி பெயரை மனதில் குறித்துவைத்து   கொண்டான் கோபி.
"சரி . . இதை பத்தி யார் கிட்டேயும் சொல்லாதே. சித்தப்பா வர நேரமாச்சு  நீ போய் படு அதுக்கு முன்னாடி மறக்காம எல்லா மாத்திரையும்  ஒண்ணு விடாம என் கிட்டே குடுத்துட்டு  படுக்கற.. சரியா ?."
"சரி" என்று வெகுளித்தனமாய் தலையாட்டி படிகட்டில் இறங்கி மறைந்தாள்  விஜி
.
கோபியின் ரத்தம் கொதித்தது. ஒரு சிற்றெரும்புக்கு கூட தீது நினைக்காத சித்தாப்பாவின்  குடும்பத்திற்கு இப்படி ஒரு சோதனையா...? கஷ்ட பட்டு படித்து முன்னேறி ஒரு நல்ல வாழ்கை அமைய போகும் நேரத்தில்... வெண்ணை திரண்டு வர தாழி உடைந்த கதையாய் ....பண பலத்தையும் அதிகாரத்தையும் பயன் படுத்தி அப்பாவி பெண்களில் வாழ்கையை சீரழிக்கும் காமுகன் ....
  அந்த MD யை   அவன் பிறப்பையும் அவன் தாயின் கற்பை பழிக்கும் வெளியே சொல்ல முடியாத தகாத வசை சொற்களை சொல்லி பற்களை நர நறவென்று கடித்து நரம்புகள் புடைக்க எதிரே அவன் இருப்பதாக நினைத்துக்கொண்டு பித்து பிடித்தவனை  போல காற்றிலே குத்துக்களை சரமாரியாக விட்டான். பலமான அந்த குத்துக்கள் அந்த MD யின் முகத்தில் விழுந்திருக்குமானால் அவன் தாடை எலும்பு  உடைந்து சில பற்கள் சிதறி இருப்பது நிச்சயம்.
படுப்பதற்கு முன் மணி பார்த்தான் கோபி. மணி பத்து. நண்பன் ரவியை அலைபேசியில் அழைத்தான் .

 "ரவி , நான்தான் கோபி ..சைதாப்பேட்டை சித்தப்பா வீட்லேந்து பேசறேன் .. தூங்கிட்டியா.. "

 "இல்லே என்ன விஷயம் ..? "
"நாளைக்கு என்ன ஷிப்ட் பாக்குற..? 

 "3-11 எதுக்கு கேக்குற...? "

"போன்ல எதுவும் சொல்ல முடியாது..ரொம்ப அவசரம் . நாளைக்கு  காலையில பத்து மணிக்கு நாயர் கடைக்கு வந்துடு .. "

 "சரி ...குட் நைட் ..."
கோபியும் ரவியும் பால்ய நண்பர்கள். ஒரே கிராமம். இருவரும் ஒரே தொழில்நுட்ப கல்லூரியில் டிப்ளமோ முடித்து ஒரே இடத்தில் வேலை கிடைத்ததில் இருவருக்கும் மட்டற்ற மகிழ்ச்சி .ரவிக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள். ஒருவரும் ஒரே இடத்தில வேலை செய்தாலும்  ஷிப்ட் காரணமாக  அடிக்கடி பார்த்து கொள்ள முடியாவிட்டாலும் நேரம்  போது எப்போதாவது பாருக்கு போய் பழைய கதைகள் பேசி ஜாலியாக பொழுதை கழிப்பார்கள். 

 இந்த பிரச்சனையை கவனத்தோடு கையாள ரவி போன்ற நம்பகமான நண்பனை அணுகுவதை தவிர வேறு வழி தெரியவில்லை கோபிக்கு.
படுக்கையில் படுத்த கோபிக்கு நித்திரை வரவில்லை. நீண்ட நேரம் மேலே சுற்றிகொண்டிருந்த ஃபேனை பார்த்து கொண்டும் விரல்களால் விஜி கொண்டு வந்து கொடுத்த டாயசீபம்  மாத்திரைகளில் ஒன்றை எடுத்து  நீண்ட நேரம் உருட்டி யோசித்து கொண்டிருந்தான் .

"உயிர் போக எத்தனை மாத்திரைகள் தேவைப்படும் ...? அவனுக்குள் ஏனோ இந்த ஐயம் எழ சிறிது நேரத்தில் உறங்கி போனான்.

                                                                    (7)
சுருக்கமாக எல்லா விஷயத்தையும் ரவியிடம் விவரித்தான் கோபி. பொறுமையாக கேட்டுவிட்டு. "இது கொஞ்சம் பெரிய மேட்டர். நம்பளால தனியா டீல் பண்ண முடியாது கன்னையா அண்ணன்     கிட்ட பேசி பாக்கலாம்....அவருக்கு நெறைய கான்டாக்ட்ஸ் தெரியும் .."என்றான் ரவி . 

கன்னையா      தொழிற்பேட்டையில்  யூனியன்   லீடர்.  கன்னையாவுக்கும்  கொளத்தூர் பக்கத்தில் புளியம்பட்டி சொந்த ஊர் என்பதால் கோபி, ரவி மேல் ஒரு அபிமானம் உண்டு  எந்த பிரச்னை என்றாலும் தயங்காமல் உடனே உதவி செய்வார்.  கன்னையாவுக்கு தொழிலாளர்கள் மத்தியில் நிறைய செல்வாக்கு இருந்த போதிலும்   மறைமுகமாக நிறைய எதிரிகள் உண்டு. அதனால் பின்புலத்தில் பக்க பலமாக  இருக்க சில விசுவாசமான அடியாட்களின் உதவி அவ்வப்போது அவருக்கு தேவைப்படும்.

 நல்ல வேளையாக கன்னையாவின்  மொபைல் நம்பர் ரவியிடம் இருந்தது.போன் போட்டு அவசரமாக பேச வேண்டும் என்று சொல்ல, தான் வீட்டில் இருப்பதாகவும் ஷிப்டுக்கு போகும் முன் வழியில் பார்த்துவிட்டு விட்டு போகும் படியும் சொன்னார்.

வீட்டில் வரவேற்பறையில் லுங்கி, பனியனில் இருந்தார் கன்னையா.

"வாங்கப்பா ...டீ , காபி ஏதாவது சாப்பிடுறீங்களா ..? என்ன அப்படி முக்கியமான விஷயம்? வேலையில ஏதாவது
பிரச்சனயா ...?"
ரவியும் , கோபியும் விஷயத்தை சொல்ல மெளனமாக கேட்டு விட்டு
ஏதோ ஆழமாக யோசித்தார்.   இருவரும்  பொறுமையாக அவர் பதிலுக்கு காத்திருக்க சிறிது நேரம் கழித்து பின்னால் எட்டி பார்த்து  தன் குடும்பத்தினர் யாரும் அருகில் இல்லை என்று உறுதி செய்து கொண்டு பேச ஆரம்பித்தார்.


"உன் ஆதங்கம் எனக்கு நல்லா புரியுது ....எனக்கும் ஊர்ல கல்யாண வயசுல  ஒரு தங்கச்சி இருக்கு. வேலை விஷயத்துல எந்த பிரச்சனைன்னாலும் நான் பாத்துக்குவேன் இது கொஞ்சம் பெரிய மேட்டர் . .  இந்த மாதிரி பிரச்சனை எல்லாம் டீல் பண்ணுறதுக்கு ஒரு ஆள் எனக்கு தெரியும். நம்ம பசங்கங்கரதால  செய்யறேன். என் பேர் மட்டும் அடி படமா பாத்துக்குங்க..."
" அந்த ஆள் கிட்டே விஷயத்தை சொல்லி உங்களை கான்டாக்ட் பண்ண சொல்லுறேன். காண்டீனுக்கு போன் பண்ணுவான். மொபைல்ல எந்த ரெக்கார்டும் வேண்டாம். ஜாக்கிரதை.."

"ரொம்ப நன்றிண்ணே அப்போ நாங்க கெளம்பறோம் ..அந்த ஆள் பேரு ........?"

"குருவி ."

                                                                        (8)

பழைய வண்ணாரபேட்டை வால்டாக்ஸ் சாலையில்  அந்த ஆட்டோ மெக்கானிக் ஷாப்பில் ஒரு பொடியன் உடல் முழுக்க எஞ்சின் ஆயில் கறையுடன் ஒரு டூ வீலரை பழுது பார்த்து கொண்டிருந்தான்.
" தம்பி இங்க குருவிங்கறது....."
குரல் கேட்டு ஒரே நொடி மட்டும் நிமிர்ந்து பார்த்து கட்டை விரலால் கடையின் பின் புறம் சைகை காட்டிவிட்டு மறுபடியும் வேலையில் மும்முரமானான்.
தரையில் சிதறி கிடந்த பல அளவு ஸ்பானர்கள், பஞ்சர் ஒட்டும் உபகரணங்கள்  இவற்றையெல்லாம் கவனமாக தாண்டி கடைக்கு பின்புறம்
அவர்கள்    செல்ல, திரைப்படங்களில் சண்டை காட்சிகளில் வரும் இடம் போல் எங்கும் துரு பிடித்த வாகனங்களின் உதிரி பாகங்கள், வண்டி சக்கரங்கள்  மற்றும் பழைய  டயர்கள் மலை போல் குவித்து கிடந்தன..

ஒரு மூலையில் ஓலை கீற்று பந்தலுக்கு கீழே இரண்டு பேர் கேரம் போர்டு விளையாடி கொண்டிருந்தார்கள் . ஒரு ஆள் ஒல்லியான தேகம் , இன்னொரு ஆள் சற்று குள்ளமாக பருமனாக.

" இங்கே "குருவி " ன்னு ..." சிறிது தயங்கி கேட்டான் ரவி .

"நான்தான் ..சொல்லுங்க என்ன விஷயம் ...? தலை நிமிராமல் கண்களை போர்டில் இருந்து எடுக்காமல் பதில் சொன்னான் ஒல்லியாக இருந்த ஆள்.

"நாங்க .. கன்னையா அண்ணன் அனுப்பி ...ஸ்டீல் பாக்டரிலேந்து ..."

ஒரு முறை மட்டும் ஓரக்கண்ணால் கோபியையும், ரவியையும் பார்த்து விட்டு அவன் விரல்கள் ஸ்ட்ரைக்கரை சுண்டி விட, அது  எதிர் மூலையில் சிகப்பு காயை கட் செய்து அதே வேகத்தில் கட்டையில் மோதி ஒரு
கோணத்தில் திரும்பி குழிக்கு அருகே இருந்த கருப்பு காயை லேசாக முத்தமிட அது குழிக்குள் விழுந்து "ஃபாலோ " ஆனது.

"குருவி "எதிரே  அமர்ந்து ஆட்டத்தில் இருந்த ஆளுக்கு சைகை காட்ட, அந்த ஆள் உரையாடல் காதில் கேட்காத தூரத்துக்கு போய் கை கட்டி நின்றான் .
"குருவி " இருவரையும்  அங்கிருந்த மர பெஞ்சை காட்டி
அமறும் படி சைகை செய்தான்.
கையில் செப்பு காப்பும் கழுத்தில் கருப்பு கயிறில்  ஒரு
டாலர் கட்டி சட்டை மேல் பொத்தான்களை கழற்றி விட்டிருந்தான். முகத்தில் சில நாட்கள் சவரம் செய்யப்படாத தாடி. தேகம் ஒல்லியாக இருந்தாலும் கண்களில் தீவிரமும் இனம் புரியாத ஒரு அலட்சியமும்
 தெரிந்தது.
" அண்ணன் எல்லா மேட்டரும் சொன்னாரு.. இதுல யாரு பொண்ணோட அண்ணன் ..?  "
"நான்தான் " என்றான் கோபி.
"எனக்கு அந்த ஆளு போட்டோ , அட்ரெஸ், வண்டி நம்பர் வேணும்.  இதெல்லாம்  நான் சொல்ற எடத்துக்கு கொண்டு வர சொல்லோ  பாதி அமௌண்ட் கையில வரணும் .  மீதி மேட்டர் முடிச்ச அப்புறம்.."

ரவி குருவி காதருகே போய் , " இதை எப்படி செய்ய போறீங்க ..........?" என்று மெதுவாய் கேட்க .

"அதெல்லாம்  உன்னாண்ட சொல்ல முடியாது . இவ்வளோ நாள் அரசியல்வாதிங்களோட விரோதத்துக்குகாக  துட்டு  குடுக்கரவனுக்கு வேலை செஞ்சிட்டு இருந்தேன். இப்பதான் முதல் தபா குடும்பத்துக்கு வேலை செய்யறேன்.மனசுக்கு தெம்மா கீது. வாத்தியாரே...நீ எதுக்கும் கவலை படாதே நம்ப கிட்டே வேல சுத்தமா இருக்கும் ...."

கோபியின் முகத்தில் சிறிது கலக்கம்  இருப்பதை கண்ட அந்த ஆள்  "குருவி " "ஏன் பாஸ் சும்மா டென்ஷனா கீற ...?"என்று கேட்க ,


"ஆளை தீர்த்து கட்டுறது என் நோக்கம் கிடையாது. என் தங்கச்சி வாழ்கையில அவன் இனிமேல் தலையிடாம இருக்கணும் ..அவ்வளோதான் .." என்றான் .


"அந்த பொண்ணுக்கு ஹெல்ப் பண்ண உன்ன மாதிரி ஒரு ஆள் இருக்குது..  உதவி செய்ய ஆள் இல்லாத மத்த பொண்ணுங்க கதி .  ..? ஒண்ணும் படிக்காத லோ கிளாஸ்.. நாங்களே மேல் போல கீது ...அவ்வளோ படிச்ச ஹை கிளாஸ்ல  இவ்வளோ கலீஜா ......?
நான் தலைக்கு குறி வெக்கறேன் . அவனுக்கு அன்னிக்கி ராசி பலன்ல நாள் நல்லா இருந்திச்சின்னா பொழைச்சுக்குவான் .. என்னா  ஒண்ணு... காலத்துக்கும் வீல் சேர்ல தான் மொடமா கெடக்கணும். அதுக்கு பதில் மேல போறதே பெட்டர் .." சுட்டு விரலால் வானத்தை காண்பித்து அலட்சியமாய் சிரித்தான் .

"நீ ஒண்ணும் பீல் பண்ணாத வாத்தியாரே ..நல்லது செஞ்ச காந்தியையே போட்டு தள்ளிட்டாங்கோ... இவன் ஒரு மொள்ளமாரி .இவனை மாதிரி ஆளுங்களை வுட்டு வெச்சா என்ன மாறி ரவுடிக்கிதான் அசிங்கம்  . நீ கெத்தா ஊட்டுக்கு போ .. " என்று சொல்லி தோளில் தட்டி வழியனுப்பி வைத்தான் "குருவி "


கோபிக்கு வயிற்றில் புளியை கரைத்து.

"குருவி"யை சந்தித்து திரும்புகையில் வழியில்   ரவியிடம் கேட்டான் கோபி .." டேய் இவனே புல் தடுக்கி பயில்வான் மாதிரி இருக்கான் இவன் போயி....எப்பிடிடா.... ?"என்று சந்தேகத்துடன் வினவ , அதற்கு ரவி,

 " மச்சான் சினிமாவில்தான் ரவுடிங்க எல்லாம் தீவட்டி தடியன்கள் மாதிரி இருப்பாங்க ..நிஜ வாழ்கையில அப்படி இல்லை .."  சிரித்தான் ரவி.


"அது போகட்டும் உன்னையும் இதுல இன்வால்வ் பண்றதுக்கு எனக்கு
 இஷ்டமில்லை . இது என் பிரச்சனை. நானாவது ஒண்டிக்கட்டை நீயோ புள்ளை குட்டிகாரன் .."   கவலையோடு சொன்னான் கோபி.


"வாயை மூடுடா .. உன் பிரச்சனை என் பிரச்சனைன்னு பிரிச்சி பேசிக்கிட்டு ..எனக்கு ஒரு தங்கச்சி இருந்து எனக்கும் இந்த மாதிரி நடந்திருந்தா  நீ எனக்கு ஹெல்ப் பண்ணி இருக்க மாட்டியா ..?  உனக்கு உள்ளுக்குள்ள எவ்வளவு ஆத்திரமும் வெறியும்  இருக்கோ  அதே அளவுக்கு ஆத்திரமும் வெறியும் எனக்கும்அவன் மேல வருது .ஊரை சுத்தவும் ஒண்ணா சேர்ந்து சரக்கு அடிக்கறதுக்கு மட்டும் ப்ரெண்ட்
ஷிப்னா அது உண்மையான ப்ரெண்ட்ஷிப் இல்லை.... "

கோபிக்கு பதில் எதுவும் சொல்ல முடியவில்லை.  உணர்ச்சி வசத்தால் தொண்டை கம்ம இப்படி ஒரு நல்ல நண்பன் கிடைத்ததற்கு பெருமிதபட்டு கண்கள் குளமாக ரவிவை ஆர தழுவிக்கொண்டான்.

"அது சரி .அவன் கேட்ட பணத்தை எப்படி அவ்வளோ சீக்கிரம் புரட்டுறது ...?.  பேங்க் ட்ரான்ஸ்ஷாக்சன் பண்ணுறது கூட ஸேப்ஃ  இல்லை .." கவலையுடன் கேட்டான் ரவி

"ஒரு சீட்டு போட்டு வெச்சிருக்கேன். அதை எடுத்துட வேண்டியதுதான். இதுல என்ன வேடிக்கைன்னா விஜிக்கு என் கல்யாண பரிசா கொஞ்சம் கொஞ்சமா சேத்து வெச்சது . அது இப்படி அவளுக்கே செலவாகுமுன்னு நெனைச்சி கூட பாக்கலே. அவளுக்கு இதை விட பெரிய கல்யாண பரிசு வேறு என்ன இருக்க முடியும் ..? "  விரக்தியில் சிரித்தான் கோபி.

                                                                        (10)

நாட்கள் கட கடவென்று பறந்தது. அடுத்த சில நாட்களில் "குருவி " கேட்ட விஷயங்களை சேகரிப்பதில் கோபிக்கு அவ்வளவு சிரமமாக இல்லை. போட்டோ, மற்ற விவரங்கள் , சீட்டு கம்பெனியில் போட்டு வைத்திருந்த பணத்தில்  "குருவி" சொன்ன தொகை முதலானவை  ஒரு மஞ்சள் பையில்  அவன் வர  சொல்லி இருந்த வேறு ஒரு இடத்தில் கை மாறியது .
  விஜி கோபியிடம் இந்த விஷயம் குறித்து பேசி இரண்டு வாரம் கழிந்தது. "குருவியிடம்" இருந்து எந்த தகவலும் இல்லை.  நாள் ஆக ஆக கோபிக்கு  
பதட்டமாக இருந்தது .

 கேண்டீனில் ரவி கோபியிடம் கிசு கிசுத்தான் ,

"கோபி ..அண்ணன் கேட்டார் விஷயம் என்ன ஆச்சுன்னு. எதாவது தெரிஞ்சுதா .?" 

 " ஒண்ணும் இல்லைடா . எனக்கு என்னமோ நம்பிக்கை இல்லை. "

"பொறுமையா இருடா ..அண்ணன் சொன்ன ஆளு அப்படி எல்லாம் ஏமாத்த மாட்டான்.."
அது சற்று ஆறுதலளித்தது  கோபிக்கு .

ஒவ்வொரு நாளும் ஏதாவது செய்தி வருமா , எப்படி செய்தி வரும் என்று கூட தெரியாமல் ஒவ்வொரு நொடியும் நரக வேதனையாக கழிந்தது கோபிக்கு.


                                                                           (11)

அன்று பதிமூன்றாம் நாள்.


 பஸ் 28- ல் வழக்கம் போல் ஏகப்பட்ட நெரிசல்.   பின்னே முண்டியடித்து  ஏறிய கோபியை   பிதுக்கி பிதுக்கி முன்னே தள்ளியது கூட்டம். படிக்கட்டில் தொங்கிய கூட்டம் பஸ்ஸை ஒரு பக்கமாக சாய்க்க கடும்  பிரயர்த்தனம் செய்வது  போலிருந்தது. ஏதோ யோசனையில் ஆழ்திருந்தவன் சட்டென சுய நினைவுக்கு வந்து நிறுத்தத்தை தவற விட்டு விட்டோமோ என்று ஐயம் எழ குனிந்து ஜன்னல் வழியாக வெளியே பார்க்க நல்ல வேலையாக இன்னும் இறங்க வேண்டிய இடம் வரவில்லை. அப்போதுதான்  எதேச்சையாக கோபியின் கண்ணில் பட்டது அது.... அந்த பெட்டி கடை முன்பு கருப்பு கொட்டை எழுத்துக்களில் மாலை பதிப்பின் முக்கிய செய்திகள்....

"ஹோல்ட் ஆன் !!    ஸ்டாப்  !!.."

திடீரென கோபி அடிவயிற்றில் பேருந்தின் மேற்கூரையை தட தடவென்று தட்டி  கத்த , முதல் கியர் போட்டு பஸ் மெதுவாக நகர ஆரம்பிக்கையில் ஓட்டுனர் ப்ரேக் போட்டு நிறுத்த, எல்லோரும் ஒருவர் மேல் ஒருவர் சாய ,ஜனங்களை தள்ளிக்கொண்டு வேக வேகமாக கீழே குதித்து  கண்டக்டரின் வசவு களையும் , கால் மிதி பட்ட கிழவியின் தூற்றல்களையும் பொருட்படுத்தாமல் அந்த  பெட்டி கடைக்கு ஓடினான் கோபி.



"தண்ணீர் டேங்கர் லாரி மோதி TKC கம்பெனியின் MD சாலை விபத்தில் மரணம் .."

அவசர அவசரமாக   பணத்தை உருவி செய்திதாளை வாங்கி  வாசித்தான் .

" இன்று காலை காரில் வேலைக்கு சென்று கொண்டிருத்த TKC கம்பனியின் MD மீது எதிரே வந்த தண்ணீர் டேங்கர் லாரி கட்டுபாட்டை இழந்து பயங்கரமாக மோதியதில் அவர் அதே இடத்தில பரிதாமாக உடல் நசுங்கி இறந்தார் .."

 கோபி தன்னை  ஆசுவாச படுத்திக்கொண்டு  அந்த செய்தியை மீண்டும் மீண்டும் படித்தான் . பிரசுரிக்கபட்டிருந்த  போட்டோவிலிருந்தும் விஜியின் கம்பெனி தெளிவாக குறிப்பிடப்பட்டிருத்ததிலிருந்தும் கண்டிப்பாக அது விஜியின் MD தான் என்று உறுதி செய்து கொண்டான்.


பெட்டிக்கடையில் வாழைபழம் வாங்கிய ஒரு பெரியவர் புலம்பினார்.  "வர வர இந்த டேங்கர் லாரி காரனுங்க பண்ணுற அட்டூழியம் தாங்க முடியலே ..ரோட்டுல  நடக்கவே  பயமா இருக்கு "
கோபியின் மொபைல் கிணு கிணுத்தது . அழைத்தது விஜி.

" நியூஸ் பாத்தியா..?"

"என்ன நியூஸ் ..? எதுவும் தெரியாத மாதிரி கேட்டான் கோபி.


"இன்னிக்கு காலையில எங்க MD ஆக்சிடெண்ட்ல இறந்துட்டார்..கடவுள் அவனை இப்படி  தண்டிப்பார்னு நான் நெனைக்கலே . அவன் குடும்பத்தை நெனைச்சாதான் பாவமா இருக்கு ..இதை சொல்லத்தான்
 கூப்பிட்டேன்  நீ கவலை பட்டுட்டு இருப்பியேன்னுதான் போன் பண்ணேன்.. நீ சொன்ன அட்வைஸ் கேட்டு பொறுமையா இருந்ததாலே இப்போ உயிரோட உன்  கேட்டே பேசிட்டு இருக்கேன் .ரொம்ப தேங்க்ஸ்  அண்ணா .."


கடைசி முறையாக ஒரு சிகரெட்டை உருவி  உதடுகளில் வைத்து பற்ற  வைத்து மீதமிருந்த சிகரெட்டுகளை பாக்கெட்டோடு அங்கிருந்த குப்பைதொட்டியில்  செய்திதாளோடு சேர்த்து வீசி   விட்டு   நடந்தான் கோபி.

 ஏனோ தெரியவில்லை ஒரு  கணம்  வெள்ளை குதிரை மேல் கையில் சங்கு சக்கரத்தோடும் தலையில் தங்க கிரீடத்தோடும்  "குருவி"யின் உருவம் அவன் கண் முன் தோன்றி மறைந்தது .


கோபிக்கு தன்னையுமறியாமல் சிரிப்பு வந்தது.



                                                                *******************