இருப்பதை விட்டு பறப்பதற்கு ஆசை படக்கூடாது என்று ஒரு பழமொழி உண்டு. ஒரு கதை நினைவுக்கு வந்தது . அதுக்கு முன்னாடி ஒரு சின்ன சமாச்சாரம் . Youtube ஆரம்பத்துல வர கமர்சியல் மாதிரி இந்த கதைக்கும் அதுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை ..
இப்பல்லாம் ஆளாளுக்கு ஹாண்ட்ஸ்ஃப்ரீ, புளு டூத் -ன்னு பேசிக்கிட்டே நடமாடுறதால யாரு தனக்கு தானே பேசிக்கற அரை லூசு , யாரு Hi-Fi Wi-Fi ஆசாமின்னு அடையாளம் கண்டுக்க ரொம்பவே கஷ்டமா இருக்கு ...சரி இப்ப கதை..
முன்னொரு காலத்துல ஒரு ஊருக்கு ஒரு பெரிய ஞானி விஜயம் செய்தாராம். அந்த ஊர் மக்கள் பலரும் அந்த ஞானியை தரிசித்து அருளாசி பெற்றனர்.
இதை கேள்விப்பட்ட ஒரு ஏழை விவசாயி அவரை காண சென்றான் . ஒரே கூட்டம். வரிசையில் நின்று அவன் முறை வந்ததும் முகத்தில் சாந்தம் தவழும் அந்த ஞானி அந்த குடியானவனிடம் வினவினார்
"சொல் மகனே , உனக்கு என்ன குறை ..?"
அதற்கு அந்த விவசாயி " அய்யா நாட்டில் எல்லோரும் சகல சௌபாக்கியங்களோடு சந்தோஷமாக இருக்கிறார்கள் . நான் மட்டும் சந்தோஷமாக இல்லை .."
அதற்கு அந்த ஞானி " சரி ..உன்னிடம் இருக்கும் சொத்து என்ன ..? என்று கேட்க, அதற்கு அந்த விவசாயி
" ஐயா சொல்லும்படியாக ஒன்றும் இல்லை . ஒரு காணி நிலம் , கொஞ்சம் கோழிகள், கால்நடை ஒரு சிறு குடிசை அவ்வளவுதான் இதை வைத்து கொண்டு எப்படி சந்தோஷமாக இருக்க முடியும் ....?" என்றான் .
" உனக்கு வாழ்க்கையில் சந்தோசம் வேண்டும் அவ்வளவுதானே ..? உனக்கு ஒரு பரீட்சை வைக்க போகிறேன் . அது முடிந்ததும் நீ விரும்பிய சந்தோசம் உனக்கு கிட்டும் என்றார் .."
அதை கேட்ட குடியானவன் "சரி நான் தயார் என்றான் .."
"சரி இன்று இரவு தூங்கும் பொழுது கோழிகளை உன் குடிலுக்குள் கொண்டு வந்து அவைகளுடன் தூங்கு ..நாளை எனை வந்து பார்.." என, அதற்கு அந்த விவசாயி,
" ஐயா , நான் இருப்பதோ சிறிய குடிசை இதில் எப்படி .." என்று தயங்க ,
"உனக்கு சந்தோஷம் வேண்டுமா , வேண்டாமா ?" என்று அந்த அறிஞர் கேட்க அரை மனதோடு விடை பெற்று சென்றான் விவசாயி .
மறுநாள் அந்த ஞானியை சந்தித்த விவசாயி "அய்யா கோழிகளின் சத்தத்தில் என்னால் நிம்மதியாக தூங்க முடியவில்லை என்றான் ..."
அதற்கு அந்த ஞானி, " நல்லது இன்று இரவு கோழிகளுடன் வெள்ளாடுகளையும் வீட்டினுள் கொண்டு வந்து உறங்கு .." நாளை மீண்டும் எனை வந்து பார் " என்றார் .
குடியானவன் அவர் சொன்னதை நிறைவேற்றி மறுநாள் மீண்டும் அந்த ஞானியை சந்தித்தான் . "நேற்று இரவு எப்படி தூங்கினாய் ..? என்று அவர் கேட்க ,
"ஐயா முந்தைய இரவே தேவலாம் , கொழிகளோடு சேர்த்து ஆடுகள் சத்தம் கொடுமையாக இருந்தது .." என்றான் .
" சரி இதுதான் பரிட்சையின் கடைசி நாள் ..இன்று இரவு கோழி, ஆடுகளுடன் மாடுகளையும் சேர்த்து கொள் ..மீண்டும் நாளை வா .." என்று சொல்ல , அந்த விவசாயிக்கு முதன் முறையாக நாம் சரியான ஒரு பித்தனிடம் வந்து மாட்டிகொண்டோமோ என்று ஐயம் எழுந்தது
எதற்கும் அது கடைசி முறை என்பதால் மறுப்பு எதுவும் தெரிவிக்காமல் வீட்டுக்கு கிளம்பினான். மறுநாள் ஞானியை சந்தித்த விவசாயின் முகம் தூக்கமில்லாமல் சோர்ந்திருந்தது
" அய்யா என் மேல் ஏன் இந்த கொல வெறி ..? நேற்று இரவுதான் நரகம் என்பது என்ன என்பதை முழுமையாக அனுபவித்தேன் .. கோழி, ஆடு , மாடுகள் இவைகளுக்கே இடம் போதவில்லை அவைகளின் சாணத்தின் நாற்றத்தோடு கொசுக்கள் என்னை பிடுங்கி எடுத்து விட்டன . ஒரு நொடி கூட கண்ணயர முடியவில்லை .." என்று புலம்ப , ஞானி.
" இதைதான் நான் எதிர்பார்த்தேன் .".என்றார் மர்மமாய் புன்னகைத்து . "
"மகனே இன்றோடு உன் கஷ்டங்களுக்கு எல்லாம் ஒரு முடிவு வரும் போ.. வீட்டுக்கு சென்று வீட்டை நன்றாக கழுவி சுத்த படுத்தி இன்று இரவு நீ மட்டும் தனியே படுத்துறங்கு . நாளை வந்து பார் .." என்று விடை கொடுத்து அனுப்பினார்
.
மறுநாள் ஞானியை காண வந்த குடியானவன் முகத்தில் மட்டற்ற மகிழ்ச்சி ...
" அய்யா ஜன்னலில் வந்த நிலவொளியில் , வீசிய இதமான தென்றலில் , நேற்று இரவு அருமையான உறக்கம் கண்டேன் இதுதான் சொர்க்கம்
. " என்றான் .
அதற்கு அந்த ஞானி , "இதுதான் நீ விரும்பிய சந்தோஷம் .. போய் வா " என்றார் .
என்னதான் வெளியில் இருக்கும் லௌதீக விஷயங்களில் சந்தோஷம் இல்லை, உண்மையான சந்தோஷம் நம் மனதுக்குள்தான்
இருக்கிறது என்று இந்த கதையின் நீதி சொன்னாலும் ஒவ்வொரு முறையும் புது மாடல் iphone , ipad வரும்போது temptation- ஐ கட்டுபடுத்துவது சிரமமாகவே இருக்கிறது.
இப்பதான் புரியுது ஏன் iphone க்கு ஆப்பிள் லோகோவா
வச்சிருக்காங்கன்னு ..
ஏடன் தோட்டத்தில temptation ஆரம்பிச்சதே இந்த ஆப்பிள் -ல இருந்து
தான் என்பதாலோ .....?
No comments:
Post a Comment