Tuesday, April 26, 2011

கருவறை (கவிதை )



முதல் விடியலுக்கு முன்

நீண்ட நித்திரை

முதல் அழுகைக்கு

முந்தைய    மௌனம்

சுதந்திரத்துக்கு முன்

சுகமான சிறைசாலை

வாழ்கை சூறாவளிக்கு

முன் மயான அமைதி

நிலையில்லா மண்குடம்

இவ்வாழ்வு என

உடைந்திடும் பனிக்குடம்

அனைத்து உறவுகளும் அறுபடவே

என உணர்த்திடும்

தொப்புள் கொடி...

ஜனனம் பூத்திடும்

ஒரு கல்லறை..

Sunday, April 24, 2011

மத்திய பருவம் (கவிதை)

இளமைக்கும் முதுமைக்கும் இடையே
மாட்டிகொண்ட திரிசங்கு நரகம்!

ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா?
நிமிர்ந்த நன்னடை சற்றே வளைய ஆரம்பிக்க
நேர் கொண்ட பார்வைக்கு
கண்ணாடி தேவைப்படும்!

பந்திக்கு முந்தியதால்  தொந்தி!
காதோரம் முளைத்த ஒரு வெள்ளி
பௌர்ணமியாய் வளர்ந்து
சிரசெங்கும் சாம்ராஜ்யம் பரப்ப
படிக்கட்டு ஏறிட முழங்கால் முட்டிகள் இரண்டும்
பட்டி மன்றம் நடத்திடும்!

உப்பு, சர்க்கரை எதிரிகளாகிவிட
புதியதாய் சில மருத்துவ வார்த்தைகள்
நம் அகராதியில் சேர்ந்து கொள்ளும்!

சங்கடங்கள்  சில அறிமுகமாயினும்
உன்னதமானது மத்திய பருவம் ...

சிற்றின்பங்களில் மனம் சலித்து போக
பேரின்ப நாட்டம் கொள்ளும் ..

வாழ்க்கை போர்தனில் காயம் பல கண்டு
ஞானோதயம் மனம்தனில் உதிக்கும்.


தூய நட்பு, உண்மையான
உறவுகளை   போற்றி
தவறுகள் உணர்ந்து தெளிய


எஞ்சிய வாழ்வின் அருமை உணர்ந்து
ஒவ்வொரு நொடியும் அனுபவித்து
வாழ்த்திட துடிக்கும் பருவம்

பக்குவமாய் கனிந்திட்ட இந்த
கூங்கனி மத்திய பருவம் போற்றுவோம்!!

புது யுகம் (கவிதை)

கருப்பு வெள்ளையில் ஒளியும் ஒலியும்

விவித பாரதியில் நேயர் விருப்பம்

தள்ளு வண்டியில் பானி  பூரி,

நண்பர்களுடன் பகிர்ந்த தேநீர்..

அரும்பு மீசை குறும்பு பார்வைகள்

இளமை துள்ளிய  நாட்கள்..

இலையுதிர் காலத்தின் சருகுகளாய்

 நாட்கள் பறந்தோட கண் விழித்து பார்கையில்

திடீரென புது யுகத்தில் நான்!

ஜன்னலுக்கு வெளியே

தெரிந்தது புதிதாய் நவயுகம்

எத்தனை வியத்தகு மாற்றங்கள்!

 பூரித்தது  நெஞ்சம் ..

கணினி, இணையதளம், கையடக்க தொலைபேசி

விண்ணை முட்டும் விஞ்ஞானம் ...

எல்லையில்லா பிரபஞ்சம்...

உள்ளங்கைக்குள் சுருங்கிபோனதின்று

இருந்தும் ..

சுருங்கியதிங்கு நம் உள்ளங்களுமா..?

செவ்வாய்க்கு விண்கலம்...!!

செவ்வாய் தோஷத்தில்

இளமையை தொலைத்து

கண்ணீர் மாலையுடன்

 நித்திய கல்யாணிகள்!

வானுயர கோபுரம் பக்கத்தில்

மாம்பழம் விற்று

வெய்யிலில்  வேகும் பாட்டி

பல்லாயிரம் மயில் கடந்து பட்டென

தொடர்பு கொள்ளும் தொழில் நுட்பம் 

பத்தடியில்  அண்டை வீட்டாரோடு

பாரா முகம்..

நான்கு சுவற்றுக்குள்  முடங்கி

துள்ளி திரிந்து  

ஓடி விளையாட

மறந்திட்ட இளம் தளிர்கள்

 ஜனனத்தில்  ஒட்டி பிறந்த அழுகையால்   

இன்றும் மனம் விட்டு

சிரிக்கவே நாம் மறந்தோம்

பிறை நிலவின் அழகு,

தாலாட்டும் தென்றல்,

சூல்கொண்ட மேகம் ...

அந்தியில் சூரியன், குழதையின் சிரிப்பு,

புல் மேல் பனித்துளி,

அடைமழை,   விண்மீன்கள்
 
இயற்கை அள்ளி தெளித்த 

வண்ணங்கள் கண் முன்

கொட்டிகிடக்க

அவசர கோலத்தில்

ரசிக்கவே நாம் மறந்தோம்

இருக்கும் சுகங்களை தொலைத்து

பறக்கும் மாயைக்கு  ஆலாய்

 பறந்து மன உளைச்சல் மட்டும் மிஞ்ச

சிதையிலும் வேகாமல் போனோம்..

இது புது யுகம் ...


என்னோடு நீ இருந்தால்..(கவிதை )



என் ஆயுள் ரேகையின் மேல்

உன் பெயர் எழுதிப்பார்த்தேன்

என்ன ஆச்சரியம் !!

அது கொஞ்சம் நீண்டது !

சுக்கிர மேட்டில் எழுதிப்பார்த்தேன்

அதிருஷ்ட குலுக்கலில் பரிசு விழுந்தது!

ஒன்று புரிந்தது...

என் உள்ளங்கைக்குள் நீ இருந்தால்

அந்த வானம் என் வசப்படும்

என் வாழ்கை கொஞ்சம் வளம் பெரும்

என்ன சொல்கிறாய் ...?

உலக கோப்பை (கவிதை )

தேசம் பல வென்று

வருடம் பல   கழித்து  

வாகை சூடி பல கோடி

உள்ளங்களில் பால் வார்தான்

எங்கள் கிரிக்கெட் சகோதரன்

ஆர தழுவி உச்சி மோந்து

அழகு பார்த்தாய்

பெருமிதத்தில் நாங்களும்

ஆனந்த கண்ணீர் சொரிந்தது உண்மை

ஹாக்கி கால் பந்து  தடகளம் என நாங்களும்

உன் குழந்தைகள்

அண்ணனுக்கு மட்டும்

என்றும் அறுசுவை உணவு

பாலும் பழமும்

ஒட்டிய வயிறுடன்
 
எச்சில் இலைக்கு  நாங்கள் ஏங்க

அங்கே
 
தட புடலாய் IPL விருந்து ..

அவனுக்கு பட்டு மெத்தை,

உறங்கிட தாலாட்டு ..

இங்கே  

கடுங்குளிரிலும் கட்டாந்தரை 

என்றும் எங்களுக்கு முகாரி!!

எங்கள் சமாதி மேல்

அவனுக்கு வெற்றி பந்தல்

தாயே ஏனிந்த ஓர வஞ்சனை?

உன் அன்பு பார்வை எங்கள்

மீதும் கொஞ்சம் விழுந்தால்

உலக அரங்கில்

ஒலிம்பிக்  தங்கம் கொய்து

உன்  பாதங்களுக்கு நாங்களும்

காணிக்கையாக்குவோம் தாயே!!